செய்திகள் மலேசியா
சரவாக்: நாய்வெறி நோய்க்கு (RABIES) இந்தாண்டு நால்வர் பலி: நூர் ஹிஷாம்
கூச்சிங்:
ரேபிஸ் எனப்படும் நாய்வெறி நோய்க்கு சரவாக்கைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் பலியாகி உள்ளார். இந் நோய்க்கு இந்த ஆண்டில் மட்டும் 4 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
45 வயதான அந்த ஆடவர் கடந்த 6ஆம் தேதி சிபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது காய்ச்சல், தலைவலி, தொண்டை கரகரப்பு, ஏதும் அருந்தும்போது வலி மற்றும் நீர் வெறுப்பு (Hydrophobia) ஆகிய அறிகுறிகள் அவரிடம் தென்பட்டுள்ளன.
இந் நிலையில் அவரது உடல்நிலை மிக வேகமாக மோசமடைந்ததை அடுத்து அவரது மாதிரிகள் யூனிவர்சிடி மலாயா சரவாக்கிற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவருக்கு நோய் தாக்கியிருப்பது மே 11ஆம் தேதி உறுதி செய்யப்பட்ட நிலையில் மறுநாள் அதிகாலை அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த அந்த ஆடவரை அவரது சக ஊழியர் வளர்த்து வந்த இரு நாய்கள் கடித்துள்ளன. கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், உடனடியாக கடிபட்ட இடங்களைத் தண்ணீர் கொண்டு கழுவுவது, மருத்துவ உதவியை நாடுவது ஆகியவற்றை அவர் பின்பற்றவில்லை எனத் தெரிகிறது.
இந் நிலையில் நாய்களின் உரிமையாளர் அவற்றைக் கொன்றுள்ளார். ஆனால், அவற்றின் உடல்களை சரவாக் கால்நடை சேவை துறையிடம் மேலதிக ஆய்வுக்காக அவர் ஒப்படைக்கவில்லை.
ரேபிஸ் கிருமி தொற்று ஒரு விலங்கு கடிப்பதால் ஏற்படுகிறது எனில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இல்லையெனில் கிருமித்தொற்று மூளை வரை பரவி மரணத்தை விளைவிக்கும் என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017, ஜூலை 1ஆம் தேதி முதல் இதுநாள் வரை சரவாக்கில் 35 பேர் ரேபிஸ் நோயால் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 33 பேர் இறந்துள்ளனர். உயிர் பிழைத்த இருவரும் குழந்தைகள். ஆனால், இருவருக்கும் கடும் நரம்பு கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
"ரேபிஸ் கிருமித் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைத்து நோய்த்தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக சரவாக் மாநில மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும் விலங்குகளின் எச்சில் உடலில் பட்டுவிட்டால் உடனடியாக அப்பகுதியைக் கழுவ வேண்டும். ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதும் முக்கியம்," என்று நூர் ஹிஷாம் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
