நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

12 வயது மகளைப் பாலியல் சுரண்டலுக்கு விற்ற தாய்

பேங்காக்: 

தனது 12 வயது மகளை ஜப்பானின் டோக்கியோவில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், தாய்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 7 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தாய்லாந்து குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றத் தகவலின்படி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுற்றுலா செல்லும் பெயரில் தனது 12 வயது மகளை ஜப்பானுக்கு அழைத்துச் சென்ற அந்தப் பெண், பின்னர் டோக்கியோவில் உள்ள மசாஜ் நிலையத்தில் சிறுமியை விட்டுச் சென்றதாக கூறப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், கடந்த ஆண்டு செப்டம்பரில் அந்தச் சிறுமி அங்கிருந்து தப்பித்து, டோக்கியோ பிராந்திய குடிவரவு சேவை அலுவலகத்தில் உதவி கோரியதைத் தொடர்ந்து அம்பலமானது.

தாய்லாந்து காவல்துறை விசாரணையில், அந்த மசாஜ் நிலையத்தின் முன்னாள் நிர்வாகியுடன் தனது மகளை அங்கு வேலை செய்ய அனுமதிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற ஆவணங்களின்படி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு முந்தைய குற்றப் பதிவு எதுவும் இல்லை. இருப்பினும், அவர் முன்பு 14 முதல் 19 நாட்கள் வரை வெளிநாடுகளில் மசாஜ் தொழிலாளியாக பணியாற்றி, ஒவ்வொரு பயணத்திலும் 50,000 முதல் 80,000 பாட் (சுமார் 6,100 முதல் 9,800 ரிங்கிட்) வரை வருமானம் ஈட்டியிருந்ததாக பதிவுகள் காட்டுகின்றன.

கடந்த ஆண்டு செப்டம்பரில் விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டு தைவானில் கைது செய்யப்பட்ட அவர், பின்னர் டிசம்பர் மாதம் தாய்லாந்துக்கு நாடு கடத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதற்கிடையில், தாயகம் திரும்பி மீண்டும் கல்வியைத் தொடர விரும்புவதாக ஜப்பானிய சமூக நலப் பணியாளர்களிடம் தெரிவித்திருந்த சிறுமி, கடந்த டிசம்பரில் தாய்லாந்துக்கு அழைத்து வரப்பட்டார். தற்போது அவர் பாதுகாப்பு அமைப்பு ஒன்றின் பராமரிப்பில் உள்ளார்.

இதே வழக்கில், டோக்கியோவைச் சேர்ந்த ஹோசோனோ மசாயுகி என்ற நபரையும் ஜப்பான் காவல்துறை கைது செய்துள்ளது. அவரது மசாஜ் நிலையத்தில் சிறுமியைப் பாலியல் சேவைக்கு கட்டாயப்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

NHK வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஆண்டு ஜூன் முதல் ஜூலை வரை ஒரு மாத காலம் அந்தச் சிறுமியை வேலைக்கு அமர்த்தியதாக போலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர். ஜப்பானில் இதுவரை கண்டறியப்பட்ட மனிதக் கடத்தல் சம்பவங்களில் மிகவும் இளம் வயதுடைய பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக அந்தச் சிறுமி கருதப்படுகிறார்.

உள்ளூர் ஊடகங்களின் தகவலின்படி, அந்த ஒரு மாத பணிக்காக சிறுமிக்கு 600,000 யென் (சுமார் 16,800 ரிங்கிட்) வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. எனினும், அந்தப் பணம் சிறுமியின் தாயுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், ஜப்பானிய மொழி அறியாத அந்தச் சிறுமி, மசாஜ் நிலையத்தின் சமையலறை பகுதியில் தங்கவைக்கப்பட்டதுடன், அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் சுமார் 60 வாடிக்கையாளர்களுக்குப் பாலியல் சேவை வழங்க கட்டாயப்படுத்தப்பட்டதாக ஜப்பான் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset