நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த போலிஸ் அதிகாரியின் கார்: பயங்கர விபத்தில் போலிஸ் அதிகாரி, ஆசிரியர் உயிரிழப்பு

லெங்கோங்: 

பேராக் மாநிலம் லெங்கோங்கில் நேற்று மாலை நிகழ்ந்த கோர சாலை விபத்தில், போலிஸ் அதிகாரி ஒருவரும் பெண் ஆசிரியர் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோலா கங்சார் – பாலிங் சாலையின் 29ஆவது கிலோமீட்டரில், தாசிக் ராபான் உணவகத்திற்கு அருகே மாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

கெரிக் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்பிரிண்டெண்ட் அப்துல் சமாட் ஒத்மான், டொயோட்டா வியோஸ் காரை ஓட்டிச் சென்ற போலிஸ் அதிகாரி, கோலா கங்சாரை நோக்கி பயணித்தபோது மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றதாகவும், அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்புறச் சாலையில் புகுந்து, கெரிக்கை நோக்கிச் சென்ற ஹோண்டா ஒடிஸ்ஸி பல்நோக்கு வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதாகவும் தெரிவித்தார்.

விபத்து நேரத்தில், 29 முதல் 55 வயதுக்குட்பட்ட ஆறு பெண் ஆசிரியர்கள் ஹோண்டா ஒடிஸ்ஸியில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

அந்த வாகனத்தை 44 வயதுடைய பெண் ஆசிரியர் ஓட்டிச் சென்றார். உயிரிழந்த ஆசிரியர், பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த ஐந்து பயணிகளில் ஒருவராக இருந்தார்.

இந்தக் கோர விபத்தில், கெரிக் தொழிற்கல்விக் கல்லூரி ஆசிரியர் 47 வயதான சுரைதா அபு பக்கர், பெங்காலான் ஹுலு மாவட்ட காவல் தலைமையகத்தில் பணியாற்றிய 41 வயதான இன்ஸ்பெக்டர் மெல்விந்தர் சிங் காமும் சிங் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்து சட்டம், பிரிவு 41(1)-இன் கீழ் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset