நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாங்காக்கில் கொதிக்கும் வெப்ப அச்சுறுத்தல்

பாங்காக்: 

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் வெப்பக் குறியீடு அபாயகரமான 51.9 டிகிரி செல்சியஸ் அளவை எட்டியுள்ளதைத் தொடர்ந்து, பொதுமக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துமாறு அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை, கடுமையான ஈரப்பதம் காரணமாக, உடலின் இயல்பான குளிரூட்டும் செயல்முறை பாதிக்கப்படுவதுடன், உயிருக்கு ஆபத்தான வெப்பப் பக்கவாதம் (Heat Stroke) ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக தாய்லாந்து சுற்றுச்சூழல், வானிலை ஆய்வுத் துறைகள் எச்சரித்துள்ளன.

அரசாங்கத்தின் வெப்ப எச்சரிக்கை வழிகாட்டுதலின்படி, 42.0 முதல் 51.9 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பக் குறியீடு ‘அபாய நிலை’ என வகைப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், உடல்நல அறிகுறிகளைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியமாகும்.

52 டிகிரி செல்சியஸைத் தாண்டினால், எந்தவித வெளிப்புற நடவடிக்கைகளும் மேற்கொள்ளக்கூடாத ‘மிகவும் ஆபத்தான நிலை’ என அறிவிக்கப்படுகிறது.

இந்தக் கடுமையான வெப்ப அலைக்கு மத்தியில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், நீண்டகால நோயாளிகள், உடல் பருமனானவர்கள், மதுபானம் அருந்துபவர்கள், சுற்றுலாப் பயணிகள், கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட வெளிப்புறப் பணியாளர்கள் என எட்டு உயர் ஆபத்து குழுக்கள் சிறப்பு கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சோர்வு, தலைச்சுற்றல், தோல் எரிச்சல், தசைப்பிடிப்பு, வெப்பப் பக்கவாதம் போன்ற பாதிப்புகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க அவசர நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்கள் வெப்பத்திலிருந்து தற்காலிக நிவாரணம் பெறும் வகையில், ‘பாங்காக் ஹீட் ரிலீஃப் ரூம்ஸ்’ எனப்படும் குளிரூட்டப்பட்ட பாதுகாப்பு மையங்களையும் தாய்லாந்து அரசு நகரம் முழுவதும் திறந்துள்ளது.

வெப்பம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், உடல்நல பாதுகாப்பில் அலட்சியம் காட்டாமல் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset