நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்: குறைந்தது 32 பேர் பலி, 700-க்கும் மேற்பட்டோர் காயம்

கராகஸ்: 

வெனிசுலாவை புதன்கிழமை தாக்கிய சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் பெரும் மனிதாபிமான பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. இதுவரை கிடைத்த தகவலின்படி, குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளதுடன், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தலைநகர் கராகஸ், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட தகவலின்படி, கராகஸிலிருந்து மேற்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் முதலில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. அதனைத் தொடர்ந்து ஒரு நிமிடத்திற்கும் குறைவான இடைவெளியில் 7.5 ரிக்டர் அளவிலான மற்றொரு சக்திவாய்ந்த அதிர்வு ஏற்பட்டது.

இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிகஸ், பல கட்டிடங்கள் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளதாகவும், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க அவசரக் குழுக்கள் இரவு பகலாக போராடி வருவதாகவும் தெரிவித்தார். கராகஸ் அருகே அமைந்துள்ள லா குவைரா மாநிலம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பருடா, சாக்காவோ மாவட்டங்களில் பல கட்டிடங்கள் சரிந்து விழுந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பல குடும்பங்கள் தங்களது உறவினர்களைத் தேடி பதற்றத்துடன் அலைந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெனிசுலாவுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

நிலநடுக்கத்தின் தாக்கம் குறித்து மதிப்பீடு செய்துள்ள USGS, உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது. இதனால் வெனிசுலா முழுவதும் அவசரநிலை சூழல் நிலவுகிறது.

மீட்புப் பணிகள் தொடரும் நிலையில், இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset