நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஐரோப்பாவை உலுக்கும் கொடிய வெப்ப அலை: உடலை குளிர்விக்க முயன்ற 40 பேர் பரிதாப பலி

பாரிஸ்:

ஐரோப்பாவைச் சுட்டெரிக்கும் வரலாறு காணாத வெப்ப அலையின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், உடலை குளிர்விக்க ஆறுகள், கால்வாய்களில் இறங்கிய 40 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பிரான்ஸ் அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு, ஜூன் 18 முதல் பதிவான இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானோர் இளைஞர்கள் எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தை அவர் “மிகவும் வேதனையூட்டும் தேசிய சோகம்” என வர்ணித்தார்.
பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் தற்போது கடுமையான வெப்ப அலைக்குள் சிக்கியுள்ளன. பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் வெப்பநிலை 44.3 டிகிரி செல்சியஸை எட்டியதுடன், நாட்டின் வரலாற்றிலேயே அதிக வெப்பமான நாளாக இது பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் 54 பிராந்தியங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பத்தைத் தணிக்க மக்கள் ஆறுகள், ஏரிகள், கால்வாய்களில் குதிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

பிரான்ஸ் விளையாட்டுத்துறை அமைச்சர் மெரினா ஃபெராரி, வெப்பத்திலிருந்து தப்பிக்க மக்கள் முயற்சிப்பதைப் புரிந்துகொள்வதாகக் கூறியதுடன், அனுமதிக்கப்படாத, ஆபத்தான நீர்நிலைகளில் குளிப்பதைத் தவிர்க்குமாறும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த வெப்ப அலைக்கு “ஒமேகா பிளாக்” (Omega Block) எனப்படும் அரிய வானிலை அமைப்பே காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குளிர்ந்த காற்று மண்டலங்களுக்கு இடையில் வெப்பமான காற்று சிக்கிக்கொள்வதால், வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

உலக வானிலை அமைப்பின் தகவலின்படி, உலக சராசரியை விட இரு மடங்கு வேகத்தில் ஐரோப்பா வெப்பமடைந்து வருகிறது. இதனால் நீடித்த வெப்ப அலைகள், தீவிர காலநிலை மாற்றங்கள் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இதற்கிடையில், இத்தாலியில் 15 நகரங்களுக்கு உச்சகட்ட வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளதால், பல பள்ளிகள் முன்கூட்டியே வகுப்புகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளன.

ஸ்பெயினின் சில பகுதிகளிலும் 44 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் அபாயம் நிலவுகிறது. இதையடுத்து மாட்ரிட் நகரில் வீடற்றோர், பாதிக்கப்படக்கூடிய மக்களுக்காக சிறப்பு காலநிலை பாதுகாப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

2003-ஆம் ஆண்டு ஐரோப்பாவில் சுமார் 80,000 உயிர்களைப் பலிகொண்ட பேரழிவு வெப்ப அலையைப் போலவே தற்போதைய சூழலும் ஆபத்தான நிலையை நோக்கி நகர்கிறது என வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வெப்பத்திலிருந்து தப்பிக்க வடக்கு ஐரோப்பாவின் குளிர்ச்சியான நாடுகளுக்குச் சுற்றுலாப் பயணிகள் திரளத் தொடங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset