செய்திகள் உலகம்
1.2 மில்லியன் ரோஹிங்கியா அகதிகளின் சுமையில் வங்காளதேசம் திணறல்: உலக நாடுகளின் அவசர தலையீடு வேண்டும் என வலியுறுத்தல்
நியூயார்க்:
ரோஹிங்கியா அகதிகளின் நெருக்கடி தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், அவர்களை உடனடியாகவும், பாதுகாப்பாகவும், கண்ணியத்துடனும் மியான்மருக்கு மீளக் குடியேற்றுவதற்கான உலகளாவிய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு வங்காளதேசம் சர்வதேச சமூகத்திற்கு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான வங்காளதேசத்தின் நிரந்தர பிரதிநிதி சலாஹுதீன் நோமான் சௌத்ரி, ரோஹிங்கியா மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு நிலையான தீர்வு மியான்மரிலேயே உள்ளது என்றும், தங்கள் சொந்த மண்ணுக்குத் திரும்ப வேண்டும் என்பதே அகதிகளின் பிரதான விருப்பமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற மியான்மர் தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் அமர்வில் உரையாற்றிய அவர், கடந்த ஒரு தசாப்த காலமாக மனிதாபிமான அடிப்படையில் சுமார் 1.2 மில்லியன் ரோஹிங்கியா அகதிகளுக்கு வங்காளதேசம் அடைக்கலம் வழங்கி வருவதாக கூறினார்.
அதேவேளை, இந்தப் பெரும் அகதி மக்கள் தொகை நாட்டின் சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல், பாதுகாப்பு கட்டமைப்புகள் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“சுமார் 1.2 மில்லியன் ரோஹிங்கியா அகதிகளின் தொடர்ச்சியான இருப்பு, உள்ளூர் சமூகங்களின் வளங்களையும் அரசின் திறன்களையும் பெரிதும் பாதித்துள்ளது.
எனவே, விரைவான, நிலையான தீர்வு இப்போது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது,” என்று அவர் வலியுறுத்தினார்.
ரோஹிங்கியா மக்களின் தன்னார்வ, பாதுகாப்பா, கண்ணியமான மீள்குடியேற்றத்தை உறுதி செய்ய, சர்வதேச நாடுகளும் பிராந்திய பங்குதாரர்களும் தங்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், அகதிகளை மீண்டும் மியான்மருக்கு அனுப்புவதே ஒரே நீண்டகால தீர்வாகும் என்றும், நெருக்கடியின் மூலக் காரணங்களைக் களைவதற்கும், அதற்குப் பொறுப்பானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் உலக நாடுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மியான்மரின் ரகைன் மாநிலத்தில் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மையை மீட்டெடுக்க உலகளாவிய, பிராந்திய அளவிலான ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மியான்மரில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களால் லட்சக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற கட்டாயமானதிலிருந்து இந்த அகதி நெருக்கடி நீடித்து வருகிறது.
தற்போது உலகிலேயே அதிகளவு ரோஹிங்கியா அகதிகளைத் தங்கவைத்துள்ள நாடாக வங்காளதேசம் திகழ்கிறது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 23, 2026, 5:44 pm
ஹோர்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாடு ஈரானிடமே தொடரும்: காலிபாஃப் அதிரடி அறிவிப்பு
June 22, 2026, 5:14 pm
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகினார்
June 22, 2026, 4:48 pm
18 மணி நேர தீவிர பேச்சுவார்த்தை நிறைவு: அமெரிக்கா–ஈரான் சந்திப்பில் புதிய திருப்பம்
June 22, 2026, 3:26 pm
ராஸ் லஃபானை உலுக்கிய பயங்கர வெடிப்பு: 54 பேர் காயமடைந்துள்ளனர்
June 22, 2026, 11:41 am
ஸ்காட்லாந்தில் முஸ்லிம்கள் மீது மா்ம நபா் தொடா் தாக்குதல்: பிரதமா் ஸ்டாா்மா் கண்டனம்
June 22, 2026, 11:37 am
சிகாகோ நகரத்தை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி, 38 பேர் காயம்
June 21, 2026, 10:24 am
வெப்பத்தின் காரணமாக பிரான்ஸில் மதுபானங்களுக்குத் தடை
June 20, 2026, 10:48 am
ஹோர்முஸ் நீரிணை பயணத்திற்குப் புதிய கட்டுப்பாடுகள்: ஈரானின் அதிரடி நடைமுறைகள் அறிவிப்பு
June 19, 2026, 2:51 pm
