செய்திகள் உலகம்
1.2 மில்லியன் ரோஹிங்கியா அகதிகளின் சுமையில் வங்காளதேசம் திணறல்: உலக நாடுகளின் அவசர தலையீடு வேண்டும் என வலியுறுத்தல்
நியூயார்க்:
ரோஹிங்கியா அகதிகளின் நெருக்கடி தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், அவர்களை உடனடியாகவும், பாதுகாப்பாகவும், கண்ணியத்துடனும் மியான்மருக்கு மீளக் குடியேற்றுவதற்கான உலகளாவிய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு வங்காளதேசம் சர்வதேச சமூகத்திற்கு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான வங்காளதேசத்தின் நிரந்தர பிரதிநிதி சலாஹுதீன் நோமான் சௌத்ரி, ரோஹிங்கியா மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு நிலையான தீர்வு மியான்மரிலேயே உள்ளது என்றும், தங்கள் சொந்த மண்ணுக்குத் திரும்ப வேண்டும் என்பதே அகதிகளின் பிரதான விருப்பமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற மியான்மர் தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் அமர்வில் உரையாற்றிய அவர், கடந்த ஒரு தசாப்த காலமாக மனிதாபிமான அடிப்படையில் சுமார் 1.2 மில்லியன் ரோஹிங்கியா அகதிகளுக்கு வங்காளதேசம் அடைக்கலம் வழங்கி வருவதாக கூறினார்.
அதேவேளை, இந்தப் பெரும் அகதி மக்கள் தொகை நாட்டின் சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல், பாதுகாப்பு கட்டமைப்புகள் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“சுமார் 1.2 மில்லியன் ரோஹிங்கியா அகதிகளின் தொடர்ச்சியான இருப்பு, உள்ளூர் சமூகங்களின் வளங்களையும் அரசின் திறன்களையும் பெரிதும் பாதித்துள்ளது.
எனவே, விரைவான, நிலையான தீர்வு இப்போது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது,” என்று அவர் வலியுறுத்தினார்.
ரோஹிங்கியா மக்களின் தன்னார்வ, பாதுகாப்பா, கண்ணியமான மீள்குடியேற்றத்தை உறுதி செய்ய, சர்வதேச நாடுகளும் பிராந்திய பங்குதாரர்களும் தங்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், அகதிகளை மீண்டும் மியான்மருக்கு அனுப்புவதே ஒரே நீண்டகால தீர்வாகும் என்றும், நெருக்கடியின் மூலக் காரணங்களைக் களைவதற்கும், அதற்குப் பொறுப்பானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் உலக நாடுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மியான்மரின் ரகைன் மாநிலத்தில் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மையை மீட்டெடுக்க உலகளாவிய, பிராந்திய அளவிலான ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மியான்மரில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களால் லட்சக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற கட்டாயமானதிலிருந்து இந்த அகதி நெருக்கடி நீடித்து வருகிறது.
தற்போது உலகிலேயே அதிகளவு ரோஹிங்கியா அகதிகளைத் தங்கவைத்துள்ள நாடாக வங்காளதேசம் திகழ்கிறது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
August 15, 2026, 5:28 pm
இந்தோனேசியாவின் ப்ளோரஸ் தீவில் பயங்கர நிலநடுக்கம்: மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
August 15, 2026, 11:11 am
ஹோர்முஸ் நீரினையை விரைவில் அமெரிக்கா பிராந்தியமாக அறிவிப்பேன்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
August 15, 2026, 10:49 am
இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
August 14, 2026, 5:33 pm
ஆஸ்திரேலியாவில் 3 முறை விமானங்கள் மோதல் சம்பவங்கள்: பிரதமர் ஆன்ட்டனி ஆல்பனீசி விசாரணைக்கு உத்தரவு
August 13, 2026, 5:25 pm
தாய்லாந்து சந்தையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, அறுவர் காயம்
August 13, 2026, 11:11 am
டெக்சாஸில் ஹெலிகாப்டர் விபத்து: இரு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி
August 13, 2026, 11:04 am
வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் பதவியிலிருந்து கரோலின் லீவிட் விலகுகிறார்
August 11, 2026, 11:11 am
வெனிசுவேலாவில் நிகழ்ந்த இரட்டை நிலநடுக்கங்கள்: பலி எண்ணிக்கை 6,301ஆக உயர்வு
August 10, 2026, 3:37 pm
