நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மோடியை பாம்பாட்டியாக காட்டிய நார்வே நாளிதழின் கேலிச்சித்திரம் 

ஆம்ஸ்டர்டாம்:

இந்தியப் பிரதமர் மோடியின் நார்வே பயணத்தின் போது அந்நாட்டின் முன்னணி நாளிதழ் வெளியிட்ட கேலிச்சித்திரம் இந்தியாவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

இந்தியப் பிரதமர் மோடி நார்வே தலைநகர் ஓஸ்லோவில் தரையிறங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாகவே, நார்வேயின் முன்னணி நாளிதழான ஆஃப்டன்போஸ்டன்' (Aftenposten), 'புத்திசாலித்தனமான ஆனால் எரிச்சலூட்டும் மனிதர்' என்ற தலைப்பில் ஒரு நீண்ட கருத்துரைக் கட்டுரையை வெளியிட்டது. 

ஐரோப்பாவின் நோர்டிக் பிராந்திய நாடுகளுடன் இந்தியா ஏன் திடீரென இத்தனை நெருக்கம் காட்ட விரும்புகிறது என்பதை ஆராய்வதாக அந்தக் கட்டுரை அமைந்திருந்தது.

ஆனால், அந்தக் கட்டுரையுடன் அவர்கள் வெளியிட்ட கேலிச்சித்திரம் தான் பெரும் அதிர்வலைகளை இந்தியாவில் உள்ள பாஜகவினரிடம் ஏற்படுத்தியது. அதில் பிரதமர் மோடியை ஒரு 'பாம்பாட்டியாக' சித்தரித்திருந்தனர். அவர் கையில் வைத்திருக்கும் மகுடியிலிருந்து எழும் பாம்பாக, கச்சா எண்ணெய் அல்லது எரிபொருளை நிரப்பும் குழாய் காட்டப்பட்டிருந்தது. 

உக்ரைன் போருக்குப் பிந்தைய உலகச் சூழலில் இந்தியா ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்குவதையும், அதே சமயம் ஐரோப்பிய நாடுகளுடன் ஆற்றல் சார்ந்த வர்த்தகத்தை விரிவுபடுத்த முயல்வதையும் கிண்டல் செய்யும் நோக்கில் இந்தச் சித்திரம் வரையப்பட்டிருந்தது.

இதற்கு முன்பும் அக்டோபர் 2022-ல் ஸ்பெயின் நாட்டின் 'லா வாங்குவார்டியா' நாளிதழ் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி எழுதும்போது இதேபோன்ற பாம்பாட்டிப் படத்தை வெளியிட்டு மன்னிப்பு கேட்கும் நிலைக்கு ஆளானது. 2014-ல் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோதும் இத்தகைய விமர்சனங்கள் எழுந்தன.

அப்போது அதற்குப் பதிலடி கொடுத்த மோடி, "இந்தியா இப்போது பாம்புகளை வைத்து வித்தை காட்டவில்லை, கணினி மவுஸைக் கொண்டு உலகையே மாயாஜாலம் செய்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset