நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வாழ்க்கையை மாற்ற வந்த இடத்தில் நேர்ந்த ஏமாற்றம்: நண்பனை நம்பி வீதிக்கு வந்த வாலிபர்

கோலாலம்பூர்: 

பரபரப்பான இந்தத் தலைநகரில், வறுமை, ஏமாற்றத்தினால் வீதியோரங்களிலும் பொது இடங்களிலும் தஞ்சமடையும் வீடற்றவர்களின் கதைகள் கண்ணீரை வரவழைக்கின்றன. 

வேலை இழப்பு, நண்பர்களாலேயே வஞ்சிக்கப்படுதல் போன்ற காரணங்களால், உறவினர்களின் ஆதரவின்றி அந்நியர்களின் கருணையை மட்டும் நம்பி வாழும் நிலைக்குப் பலர் தள்ளப்பட்டுள்ளனர்.

ஜொகூர் பாருவில் பேருந்து பயணச்சீட்டு விற்பனையாளராகப் பணியாற்றிய 30 வயது நஸ்ரி, நண்பர் ஒருவரின் வேலை வாய்ப்பு வாக்குறுதியை நம்பி RM800 மலேசிய ரிங்கிட்டைப் பறி கொடுத்துள்ளார். 

தலைநகருக்கு வந்த பின்பே, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், தற்போது வெறும் RM16 மலேசிய ரிங்கிட்டுடன் பசார் செனி பகுதியில் வீதியோரம் வசித்து வருகிறார். 

தனது குடும்பத்தின் தலைவிதியை மாற்ற வந்த இடத்தில், அடுத்த வேளை உணவிற்கே பொதுமக்களின் உதவியை எதிர்பார்க்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.

இதேபோல், கிள்ளான் பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க சிவா என்ற நபர், கொவிட்-19 காலத்திற்குப் பிறகு தனது தொழிற்சாலை பணியை இழந்ததால் வீதிக்கு வந்துள்ளார். 

நிரந்தர வேலை கிடைக்காமல் தவிக்கும் அவர், நண்பர்கள் தரும் சிறு உதவியைக் கொண்டு அவ்வப்போது கிள்ளான் சென்று வருகிறார். தன்னைப் போன்ற நிலையில் உள்ளவர்களுடன் நேரத்தைச் செலவிடும் அவர், சில நேரங்களில் மது போதையில் இருப்பவர்களால் சிக்கல்கள் ஏற்படுவதையும் சுட்டிக்காட்டினார்.

ஏமாற்றங்கள் ஒருபுறம் இருந்தாலும், சக மனிதர்களின் சிறு சிறு உதவிகளே இவர்களின் வாழ்வாதாரத்தைத் தக்கவைத்து வருகின்றன. கையில் பணமின்றி, திரும்புவதற்கு வழி தெரியாமல் தவிக்கும் இவர்களின் வாழ்க்கை, தலைநகரின் கண்ணுக்குத் தெரியாத மறுபக்கத்தை உலகிற்குப் பறைசாற்றுகின்றது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset