நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பட்டதாரிகளின் திறமை வீணாகக் கூடாது: வேலை தேடும் இளைஞர்களுக்குக் கூடுதல் உதவிகள்

கோலாலம்பூர்: 

உலகளாவிய விநியோக நெருக்கடியால் ஏற்படும் பொருளாதார மந்த நிலையைத் தொடர்ந்து, வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்கொள்பவர்களுக்கு உதவும் வகையில், கூடுதல் நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவில் அறிவிக்கும் என்று டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் கூறினார்.

"வேலை வாய்ப்புகளில் இருந்து விலக்கப்பட்ட வேலையில்லாத டிப்ளமா, இளங்கலை பட்டதாரிகள் உள்ளிட்ட குழுவினருக்கு உதவ, கூடுதல் நடவடிக்கைகளைக் குறுகிய காலத்தில் நாங்கள் அறிவிப்போம்" என்று இன்று இங்கு நிதி நிறுவனங்களுடனான வட்ட மேசை அமர்வுக்குத் தலைமை வகித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 மலேசிய தேசிய வங்கியின் ஆளுநர் டத்தோஸ்ரீ அப்துல் ரஷீத் கஃப்பூர் உட்பட பிரதமர் துறையின் தலைமைச் செயலாளர் டத்தோ ஜோஹான் மஹ்மூத் மெரிக்கன் ஆகியோரும் அந்த அமர்வில் கலந்து கொண்டனர்.

இதற்கு முன்னர், உலகளாவிய விநியோக நெருக்கடியின் தாக்கத்தை எதிர்கொள்ள மக்களுக்கு உதவ பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அவற்றில் பூடி மடானி ரோன்95 (பூடி95) திட்டத்தின் கீழ் பெட்ரோல் விலைகளைத் தக்கவைத்தல், சபா, சரவாக்கிற்கான டீசல் மானியத்தைத் தக்கவைத்தல் ஆகியவையும் அடங்கும்.

கூடுதலாக, அரசாங்கம், தனிப்பட்ட டீசல் வாகன உரிமையாளர்கள், விவசாயிகள், சிறு நில உரிமையாளர்களுக்கான பூடி டீசல், விவசாய-பொருட்களின் மாதாந்திர உதவி விகிதங்களை, விவசாயிகளுக்கான உழவு ஊக்கத்தொகை உதவியை (IPKP) அதிகரித்ததுடன், நுண், சிறு, நடுத்தர தொழில்களுக்கு உதவுவதற்காக 5 பில்லியன் வரை நிதி உத்தரவாதத்தை வழங்கியது.

தற்போதைய புள்ளிவிவரங்களின் அடிப்படையில், பிப்ரவரி 2026 இல் மலேசியாவின் வேலையின்மை விகிதம் 2.9 சதவீதம், 506,800 ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset