நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கட்டுப்பாட்டை மீறிய கலை நிகழ்ச்சி: மாணவர்களின் எல்லை மீறிய செயலால் அதிரடி நடவடிக்கை எடுத்த மலாயா பல்கலைக்கழகம்

பெட்டாலிங் ஜெயா:

மலாயா பல்கலைக்கழகத்தில் (UM) நடைபெற்ற நாடகத் நடிப்பு நிகழ்வின் போது, மேடையில் இடம்பெற்ற அநாகரீகமான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக நிர்வாகம் தனது வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துள்ளது. 

இந்தச் சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாகவும், இது குறித்து எழுந்த அனைத்துக் கவலைகளையும் கவனத்தில் கொண்டுள்ளதாகவும் பல்கலைக்கழகம் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நாடகப் போட்டியின் விதிகளின்படி, கலாச்சாரம், மதம், ஒழுக்க விழுமியங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான காட்சிகள் இடம்பெறக்கூடாது என்பது கட்டாயமாகும். 

அனுமதிக்கப்பட்ட கதை வசனத்தைத் தாண்டி, சில ஆபாசக் காட்சிகள் சுயமாகச் சேர்க்கப்பட்டிருப்பது ஆரம்பக்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது. ஒரு ஆண், பெண் மேடையில் நெருக்கமாக இருப்பது போன்ற இந்தக் காட்சிகள் சமூக ஆர்வலர்கள், பொதுமக்களிடையே பெரும் கண்டனத்தை எழுப்பியுள்ளன.

குறிப்பாக, பிரபல மதப்போதகர் ஃபிர்தாஸ் வோங், நாட்டின் முன்னணிப் பல்கலைக்கழகம் ஒன்றில் இத்தகைய எல்லை மீறிய காட்சிகள் அரங்கேற்றப்பட்டதன் அவசியம் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நாடகக் குழுவைப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்து பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுபோன்ற அத்துமீறல்களை ஒருபோதும் சகித்துக்கொள்ளப் போவதில்லை என்றும் பல்கலைக்கழகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இனிவரும் காலங்களில் இத்தகைய அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழாத வண்ணம், கலை நிகழ்ச்சிகளின் மீதான கண்காணிப்பை மேலும் பலப்படுத்தப் போவதாகப் பல்கலைக்கழகம் உறுதியளித்துள்ளது.

இது தொடர்பான மேலதிகத் தகவல்களை அறிந்துகொள்ள விரும்புவோர், பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்புப் பிரிவைத் தொடர்புகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset