நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மானிய டீசல் கடத்தல்: லாபம் ஈட்டும் கும்பலின் 5 தந்திரங்கள் அம்பலம்

கோலாலம்பூர்: 

சந்தை விலையை விட மானிய டீசலின் விலை மிகக் குறைவாக இருப்பதைப் பயன்படுத்தி, ஒரு லிட்டருக்கு 4 முதல் 5 மலேசிய ரிங்கிட் வரை சட்டவிரோதமாக லாபம் ஈட்டும் கும்பல்கள் அதிகரித்துள்ளதாக உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவு அமைச்சகம் எச்சரித்துள்ளது. 

ஒரு நாளைக்கு 3,000 லிட்டர் டீசலைச் சேகரிப்பதன் மூலம், இக்கும்பல்கள் சுமார் RM15,000 ரிங்கிட் வரை முறையற்ற வருமானம் ஈட்டுவதாகத் தெரியவந்துள்ளது.

இந்த மோசடியில் ஈடுபடும் கும்பல்கள் ஐந்து முக்கிய தந்திரங்களைக் கையாளுவதாக அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

எரிபொருள் நிலையங்களில் பலமுறை மீண்டும் டீசல் நிரப்புவது, போலி வாகன எண்களைப் பயன்படுத்துவது, மற்றவர்களின் அடையாள அட்டைகளைத் தவறாகப் பயன்படுத்துவது, சிறப்பு அனுமதி இன்றி 20 லிட்டருக்கும் அதிகமான டீசலை வாங்குவது போன்றவை இதில் அடங்கும். இவ்வாறு சேகரிக்கப்படும் டீசல், ரகசிய இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

உலகளாவிய பதற்றங்களால் சந்தையில் டீசல் விலை உயரும்போது, இத்தகைய கடத்தல் கும்பல்கள் மானிய விலையில் கிடைக்கும் டீசலை குறிவைக்கின்றன. 

எரிபொருள் நிலையங்கள், தொழிற்சாலைகள், சில தனிநபர்கள் இணைந்து இந்தச் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, எல்லைப் பகுதிகளில் வாகனங்களை உருமாற்றி அண்டை நாடுகளுக்கு டீசலைக் கடத்தும் நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மீனவர்களுக்கான டீசல் மானியம், சிறப்பு அட்டைகளைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதாகக் குறிப்பிட்ட அமைச்சகம், இத்தகைய முறைகேடுகளைத் தடுக்கக் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக உறுதி அளித்துள்ளது. 

பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கவும், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கவும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset