நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

'நாட்டை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்': பிலிப்பைன்ஸுக்கு டீசல் அனுப்பப்பட்டது என்ற சர்ச்சையை நிறுத்துமாறு அன்வர் மக்களைக் கோருகிறார்

கோலா திரங்கானு: 

மலேசியாவிலிருந்து பிலிப்பைன்ஸுக்கு டீசல் எண்ணெய் அனுப்பப்பட்டது என்ற கூற்று தொடர்பான சர்ச்சையை நிறுத்துமாறு பிரதமர் அன்வர் இப்ராஹிம் அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதே நேரத்தில், இது ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் பரிவர்த்தனையை உள்ளடக்கியது என்றும், அரசாங்கம் இதில் சம்பந்தப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

இது ஜொகூரின் பெங்கேராங்கில் செயல்படும் சர்வதேச நிறுவனமான விட்டோலின் வர்த்தகப் பரிவர்த்தனை என்றும், அதற்கு பெட்ரோனாஸ் உடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.

"இது சிறிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தாலும், நாங்கள் அதைத்தான் கையாண்டு வருகிறோம். இந்தச் சர்ச்சையை நிறுத்திவிட்டு, தற்போதைய சவாலான பொருளாதார நிலையில் நாட்டை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

இன்று இங்குள்ள இம்தியாஸ் யயாசான் இடைநிலைப்பள்ளி, திரங்கானுவில் நடைபெற்ற, தஹ்பீஸ் மாணவர்களுடனான மடானி நல்லுறவு நிகழ்ச்சியில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.

இதற்கிடையில், எரிபொருள் மானியங்கள் இன்னும் தக்கவைக்கப்பட்டுள்ள போதிலும், அரசாங்கத்தைத் தொடர்ந்து விமர்சித்து வரும் சில தரப்பினரின் அணுகுமுறை குறித்தும் அன்வர் வருத்தம் தெரிவித்தார்.

அரசாங்கம் இப்போது அதிகரித்து வரும் மானியச் சுமையைச் சுமந்து வருவதாகவும், ரோன்95 பெட்ரோல், டீசல் ஆகியவை இதில் அடங்கும் என்றும் அவர் கூறினார்.

"ரோன்95-க்கு, முன்பு மானியம் 700 மில்லியன் ரிங்கிட்டாக இருந்தது. இப்போது அது ஒரு மாதத்திற்கு 5 பில்லியன் ரிங்கிட்டாக உள்ளது. 

 இருப்பினும், விவசாயிகள், மீனவர்கள், பொது போக்குவரத்து, பள்ளி பேருந்துகளுக்கு நாங்கள் டீசல் மானியத்தை வழங்குகிறோம்" என்றார் அவர்.

டீசல் மானியச் செலவு ஒரு மாதத்திற்கு சுமார் 2 பில்லியனில் இருந்து 7 பில்லியனாக அதிகரித்துள்ளதாகவும், இது நாட்டின் நிதியில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

மானிய அதிகரிப்பு, மக்களுக்கு நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் முன்முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் பொருட்டு, சில பெரிய திட்டங்கள் ஒத்திவைக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் மேலும் பேசிய அவர் கூறினார்.

இதற்கு முன்னர், மலேசியா 329,000 டீசல் பீப்பாய்களைப் பிலிப்பைன்ஸுக்கு அனுப்பியதாகக் கூறிய பிலிப்பைன்ஸ் ஊடக அறிக்கையை தேசிய பொருளாதார நடவடிக்கை சபை நிராகரித்தது.

இதைத் தொடர்ந்து, பெட்ரோனாஸ் பிலிப்பைன்ஸுக்கு டீசலை விநியோகிப்பதற்கான எந்தவொரு ஒப்பந்தத்திலும் நுழைந்ததில்லை என்றும் வலியுறுத்தியது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset