செய்திகள் வணிகம்
உலக எரிசக்தி நெருக்கடி: டிக்டாக் ஷாப் பாதிக்கப்படுமா?
கோலாலம்பூர்:
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி, மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் ஆகியவை டிக்டாக் ஷாப்-இன் செயல்பாடுகள், குறிப்பாக டெலிவரி விநியோகச் சேவைகளில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து டிக்டாக் தரப்பினர் விளக்கமளிக்க வேண்டும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்ஸில் கோரியுள்ளார்.
அடுத்த செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கும் தேசிய பொருளாதார நடவடிக்கை சபைக் (எம்டேன்) கூட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள் சமர்ப்பிக்கப்படும் என்றார் அவர்.
"புவிசார் அரசியல், எரிசக்தி நெருக்கடிகளின் தாக்கம், வணிக கூட்டாளர்கள், டிக்டாக் ஷாப்-இன் முழு சுற்றுச்சூழல் அமைப்பிலும் ஏற்படுத்திய விளைவுகளைப் புரிந்துகொள்வதற்கு இந்த ஆய்வு முக்கியமானதாகும்.
"அந்தத் தளத்தின் செயல்பாடுகளை ஆதரிக்கும் தொடர்புடைய சேவைகளும் இதில் அடங்கும்" என்று இன்றிரவு இங்கு நடைபெற்ற டிக்டாக் ஷாப் ரையிக்கான் ராயா 2026 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்நிகழ்வில் தகவல் தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங், டிக்டாக் ஷாப் மலேசியாவின் மூலோபாய கூட்டாண்மை மூத்த இயக்குநர் நூர் அஸ்ரே அப்துல் அஜிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தற்போது டிக்டாக் ஷாப் பொருளாதாரத்தில் ஏழு மில்லியனுக்கும் மேற்பட்ட 'லைவ் ஸ்ட்ரீமர்கள்' ஈடுபட்டுள்ளதாக ஃபாஹ்மி கூறினார். இது RM1.9 பில்லியன் வருவாயை ஈட்டியுள்ளதோடு மலேசிய மக்களுக்கு சுமார் 147,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
இந்த சாதனைகள், மக்கள் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஈடுபடுவதற்கான பரந்த இடத்தைத் திறந்துள்ளதாக அவர் கூறினார். அதாவது, சொந்த தயாரிப்புகளைச் சந்தைப்படுத்துவது அல்லது அந்தத் தளம் அல்லது 'இணைப்பு' மூலம் மற்றவர்களின் தயாரிப்புகளை விற்பனை செய்ய உதவுவது இதில் அடங்கும் என்றார் அவர்.
இதற்கிடையில், டிக்டாக் ஷாப், மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையத்துடன் (எம்.சி.எம்.சி.) இணைந்து செயல்படுமாறு பரிந்துரைப்பதாக ஃபாஹ்மி கூறினார். இது, நாடு முழுவதும் கிட்டத்தட்ட 1,100 கிளைகளைக் கொண்ட தேசிய தகவல் பரவல் மையங்கள் (நாடி) மூலமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
"பல நாடிகள் கிராமப்புறங்களில் உள்ளன. அவை உள்ளடக்க படைப்பாளர்களை உருவாக்குவதற்கும், டிக்டாக் ஷாப் மூலம் உள்ளூர் தயாரிப்புகளை இணையத்தில் விற்க சமூகத்திற்கு உதவுவதற்கும் பயன்படுத்தப்படலாம்" என்று அவர் கூறினார்.
எம்.சி.எம்.சி.-இன் தலைவர் டான் ஸ்ரீ முஹம்மத் சாலிம் ஃபதேஹ் டின், இந்த வெள்ளிக்கிழமை சிங்கப்பூரில் டிக்டாக்-இன் நிர்வாகத்துடன் சந்திப்பு நடத்த இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உட்பட பல எழுந்த விஷயங்களைப் பற்றி விவாதிப்பதாகவும் ஃபாஹ்மி தெரிவித்தார்.
மலேசியாவில் வேகமான, பரந்த இணைய வசதி, வீட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியமின்றி மக்கள் வருமானம் ஈட்டுவதற்கும், இணைய விற்பனை மூலம் வணிகர்கள் தங்கள் வணிகங்களை விரிவுபடுத்துவதற்கும் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று அவர் நம்புவதாகத் தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 4:08 pm
குழந்தைகள் உணவில் எலி விஷம்: விற்ற பொருள்களைத் திரும்பப் பெறும் தனியார் நிறுவனம்
April 21, 2026, 12:41 pm
அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை: முக்கிய உலக நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட் ஏற்றம்
April 15, 2026, 11:49 am
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை: பலம் பெறும் மலேசிய ரிங்கிட்
April 15, 2026, 11:10 am
தாய்லாந்தின் சொங்க்ரான் திருவிழா: 3000 கோடி பாட் வருமானம் ஈட்டி மெகா சாதனை
April 13, 2026, 4:47 pm
அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி
April 9, 2026, 5:23 pm
