நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சாகசம் செய்த சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்: ஒரே நொடியில் பறிபோன 15 வயது உயிர்

பண்டார் பெர்மாய்சூரி: 

நேற்றிரவு சுங்கை டோங், கம்போங் பெலோங்கில் தனது மோட்டார் சைக்கிளில் ஆபத்தான சாகசத்தைச் செய்து கொண்டிருந்த போது, 15 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

செத்தியூ போலிஸ் தலைவர் சூப்பிரண்டெண்டன் முஹம்மத் ஜைன் மாட் டிரிஸ், விபத்து மாலை 6.45 மணிக்கு நிகழ்ந்தது என்றும் 15, 14 வயதுடைய மற்ற இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் காயமின்றி தப்பினர் என்று தெரிவித்தார்.

"ஆரம்பக்கட்ட விசாரணையில், ஹோண்டா சி100 மோட்டார் சைக்கிளில் சென்ற படிவம் மூன்று மாணவனான பாதிக்கப்பட்டவர், வீலி (முன் சக்கரம் தரையில் இருந்து தூக்கப்படும் ஒரு சாகசம்) செய்து கொண்டிருந்ததாகத் தெரியவந்தது" என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அந்தச் சாகசம், அவர் மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதுவதற்கு காரணமாக இருந்தது. அவர் சாலையில் விழுந்து மேலும் மூன்றாவது மோட்டார் சைக்கிள் அவரது தலையில் மோதியது என்று முஹம்மத் ஜைன் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் சுங்கை டோங் சுகாதாரக் கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சையின் போது அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டார். அவரது உடல் பின்னர் பிரேத பரிசோதனைக்காக செத்தியூ மருத்துவமனையின் தடயவியல் பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

"இளைஞர்கள் தங்களையோ அல்லது மற்றவர்களையோ ஆபத்தில் ஆழ்த்தும் சாகசங்களில் ஈடுபடக்கூடாது, மேலும் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுவதிலிருந்து தங்கள் குழந்தைகளைத் தடுக்க பெற்றோர்கள் அவர்களை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அவர் எச்சரித்தார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset