நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒருமுறை டீசல் நிரப்ப RM1,600 செலவா?: 5,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

கோத்தா பாரு: 

திங்கட்கிழமை இங்குள்ள பெங்காலான் செப்பாவில் நடைபெற்ற அமைதியான கூட்டத்தில் கலந்துகொண்ட கிழக்கு கடற்கரை பேருந்து சங்கத்தைச் (பேபாட்) சேர்ந்த 50 உறுப்பினர்கள் இவ்வாறு கோஷம் எழுப்பினர். எரிபொருள் விலை உயர்வு தங்கள் நிறுவனங்களின் செயல்பாடுகளில் அழுத்தத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படும் நிலையில், டீசல் மானியத்தைப் பெறுவதற்கு உதவுமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிமின் தலையீட்டைக் கோரியே இந்தக் கூட்டம் நடைபெற்றது.

கிழக்கு கடற்கரையில் 1,000 சுற்றுலா பேருந்து  உரிமையாளர்களை உள்ளடக்கிய 5,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அரசாங்கத்திடமிருந்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் வணிகத்தை மூட நேரிடும் என்று கிழக்கு கடற்கரை பஸ் சங்கத்தின் துணைத் தலைவர் வான் முஹம்மத் நுஹைரி வான் ஹமாத் தெரிவித்துள்ளார்.

"தற்போது லிட்டருக்கு RM6.02-ஐ எட்டியுள்ள டீசல் விலை உயர்வு, பல நிறுவனங்கள் கடுமையான நஷ்ட அபாயத்தை எதிர்கொள்ள காரணமாகிறது. ஏனெனில், அதிகரித்து வரும் செயல்பாட்டுச் செலவுகளை எங்களால் இனி சமாளிக்க முடியவில்லை.

"சேவைக் கட்டணங்கள் சுமார் 30 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்ததை அடுத்து வாடிக்கையாளர்கள் தங்களின் முன்பதிவுகளை ரத்து செய்யத் தொடங்கியுள்ளனர். முன்னர் கோத்தா பாருவிலிருந்து கோலாலம்பூருக்குச் சென்று திரும்ப ஒரு பயணத்திற்கு RM3,000 மட்டுமே வசூலிக்கப்பட்ட நிலையில், இப்போது அது கிட்டத்தட்ட RM5,000-ஐ எட்டியுள்ளது" என்று அவர் திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

ஒரு சுற்றுலா பஸ்ஸிற்கான ஒருமுறை டீசல் நிரப்பும் செலவு இப்போது RM1,600 வரை எட்டியுள்ளது. முன்னர் இது RM700 முதல் RM800 வரை மட்டுமே இருந்தது. இதில் இன்னும் இரண்டு பஸ் ஓட்டுனர்களின் கூலி உள்ளடக்கப்படவில்லை.

டீசல் செலவைச் சமாளிப்பதற்காக அவர்கள் விலைகளை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டால், வாடிக்கையாளர்கள் முன்பதிவுகளை ரத்து செய்வதாக அவர் தெரிவித்தார்.

கிழக்கு கடற்கரையில் சுற்றுலா பஸ் துறையானது, பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், உள்ளூர் சமூகத்தின் முன்பதிவுகளைப் பெருமளவு நம்பியுள்ளது என்று வான் முஹம்மத் நுஹைரி தெரிவித்தார். இது, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைத் தொடர்ந்து பெறும் பெரிய நகரங்களில் உள்ள நிறுவனங்களுடன் வேறுபட்டது.

ரமலான் மாதம், வடகிழக்கு பருவமழைக் காலம் போன்ற ஆண்டின் குறிப்பிட்ட காலங்களில், செயல்பாடுகள் கிட்டத்தட்ட நின்றுபோகும் நிலை ஏற்படுவதாகவும், இது வருமானத்தைப் பாதிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

"ரமலான் மாதத்திலும், நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் (வடகிழக்கு பருவமழை காரணமாக) எந்த முன்பதிவுகளும் பெறப்படாததால், ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் எங்களுக்கு வருமானம் இருக்காது.

"ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலும் பள்ளித் துறைக்கான பட்ஜெட் இன்னும் விடுவிக்கப்படாத காரணத்தால், முன்பதிவுகள் எதுவும் பெறப்படுவதில்லை" என்று அவர் கூறினார்.

டீசல் விலை திடீரென உயர்ந்தால், அவர்களால் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 தொற்றின் போது, பாதி உரிமையாளர்கள் தங்கள் செயல்பாடுகளை மூட வேண்டியிருந்தது என்றும், உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அதே நிலைமை மீண்டும் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.

"தற்போதைய நிலையில், நிறுவனங்கள் இரண்டு மாதங்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்.

"மானியம் அல்லது தீர்வு எதுவும் இல்லையென்றால், மேலும் பல உரிமையாளர்கள் வணிகத்தை மூடுவார்கள் என்றும், தொழிலாளர்கள் தங்கள் வருமான ஆதாரத்தை இழக்க நேரிடும்," என்று அவர் கூறினார்.

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர், சுற்றுலாத்துறை, நிதி அமைச்சகங்கள் உட்பட அரசாங்கத்திற்கு மானியம் பெறுவதற்கான விண்ணப்பம் அனுப்பப்பட்டதாகவும், இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் வான் முஹம்மத் நுஹைரி தெரிவித்தார்.

அதன்படி, அந்தத் துறையின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, நியாயமான விகிதத்தில் டீசல் மானியத்தை வழங்க அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று அவர் நம்புவதாகக் கூறினார்.

"அந்தத் துறையின் நிலைத்தன்மைக்கும், தொழிலாளர்களின் நலனுக்கும் உதவிகள் வழங்கப்படும் வரை, அரசாங்கம் நிர்ணயிக்கும் எந்த நிபந்தனைகளையும் விவாதித்து ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

"ஆரம்ப கட்டத்தில், அரசாங்கம் லிட்டருக்கு RM1.88 விலையில் டீசல் மானியத்தை வழங்கியது. எனினும், அது RM2.15 ஆக உயர்த்தப்பட்டாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்" என்று அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset