நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

காய்கறிகளைக் கொட்டி அழிக்கும் விவசாயிகள்: லோஜிங் மலைப்பகுதியில் முடங்கும் விவசாயத் தொழில்

குவா மூசாங்: 

மலேசியாவின் மாபெரும் இரண்டாம் காய்கறி உற்பத்தி மையமான லோஜிங் மலைப்பகுதி விவசாயிகள், கடுமையான நஷ்டம், உற்பத்தி நிறுத்த அபாயத்தை எதிர்கொண்டு வருகின்றனர். 

இறக்குமதி செய்யப்படும் காய்கறிகளின் உள்வரவு அதிகரித்துள்ளதால், உள்நாட்டு காய்கறிகளுக்கான தேவை குறைந்து விலையும் கீழ்மட்டத்திற்குச் சென்றுள்ளது. உதாரணமாக, ஒரு கிலோ RM10 ரிங்கிட்டிற்கு விற்கப்பட்ட மிளகாய் தற்போது RM3.50 ரிங்கிட்டிற்கும், தக்காளி, முட்டைக்கோஸ் போன்றவைகள் வெறும் RM0.60 காசுகளுக்கும் விற்கப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இறக்குமதி காய்கறிகள் மீதான முறையான கட்டுப்பாடு இல்லாததால், அறுவடை செய்த காய்கறிகளை விற்க முடியாமல் விவசாயிகள் சாலை ஓரங்களில் கொட்டி அழிப்பதாக லோஜிங் காய்கறி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வோங் தெங் வோங் வேதனையுடன் தெரிவித்துள்ளார். 

இதனுடன் கடும் வறட்சி, டீசல் விலை உயர்வால் உற்பத்திச் செலவு 30 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. முறையான மானியங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்காதது அவர்களின் சுமையைக் கூட்டியுள்ளது.

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இரசாயன உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

தற்போது கையிருப்பில் உள்ள உரங்கள் இன்னும் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் நிலையில், உர விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. உரம் கிடைக்காவிட்டால் தக்காளி, மிளகாய் போன்ற பயிர்கள் பலன் தராது என்பதால், 50 விழுக்காட்டிற்கும் அதிகமான விவசாயிகள் தங்கள் தோட்டங்களை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு உற்பத்தி நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இருந்தும், சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளின் இறக்குமதியுடன் போட்டியிட முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். 

நில வாடகை, தொழிலாளர் ஊதியம், இயந்திரச் செலவுகளைக் கூட ஈடுகட்ட முடியாமல் தவிப்பதாகக் கூறும் லோஜிங் விவசாயிகள், அரசு உடனடியாக இறக்குமதியைக் கட்டுப்படுத்தி உள்நாட்டு விவசாயிகளைக் காக்க வேண்டும் என உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset