நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பறிபோன வாழ்வாதாரம்: கர்நாடகாவில் கொட்டித் தீர்த்த மழையால் தோட்டக்கலைப் பயிர்கள் மொத்தமாக நாசம்

மைசூர்:

கர்நாடகா மாநிலத்தின் சாமராஜநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் அதீத கனமழை,பலத்த காற்றினால், நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான தோட்டக்கலைப் பயிர்கள் பெரும் சேதமடைந்துள்ளன. 

குறிப்பாக ஹனூர், கொள்ளேகால், யலாந்தூர் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றினால் தென்னை, வாழை, பப்பாளி மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இதனால் அப்பகுதி விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அறுவடைக்குத் தயாராக இருந்த விளைச்சல்கள் மழையினால் பாழாகியுள்ள நிலையில், பல இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து, மின் விநியோகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

தொடர் மழையினால் விளைநிலங்களில் நீர் தேங்கியுள்ளதால், எஞ்சியிருக்கும் பயிர்களும் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாகப் பாதிப்புகளை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது வருவாய்த் துறை, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் இணைந்து மழையினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட ஆய்வுகளின்படி, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பயிர்கள் சேதமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

வரும் நாட்களில் மேலும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள், விவசாயிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

மீட்புப் பணிகள், சீரமைப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குக் காப்பீட்டுத் தொகையை விரைவாகப் பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்கும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட இந்தப் பாதிப்பு, சாமராஜநகர் மாவட்டத்தின் விவசாயப் பொருளாதாரத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset