நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கோவிலில் காலணி அணிந்து புகைப்படம் எடுத்ததால் வந்த வினை: கர்நாடகாவில் புகைப்படக் கலைஞர்கள் மீது சரமாரி தாக்குதல்

கர்நாடகா:

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பெட்டடா பைரவேஷ்வரா சுவாமி கோவில் வளாகத்தில், திருமணத்திற்கு முந்தைய புகைப்படப் பிடிப்பில் (Pre-wedding photoshoot) ஈடுபட்டிருந்த புகைப்படக் கலைஞர்கள், உள்ளூர்வாசிகளால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவிலின் புனிதத்தைப் பேணாமல் காலணிகளை அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்ததாகக் கூறி, அங்கிருந்த உள்ளூர் இளைஞர்கள் புகைப்படக் கலைஞர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கும்பல் புகைப்படக் கலைஞர்களைக் கடுமையாகத் தாக்கியதோடு, அவர்களின் விலை உயர்ந்த கேமரா, உபகரணங்களையும் அடித்து நொறுக்கியுள்ளது. 

இத்தாக்குதலில் காயமடைந்த நவி, நந்தன் ஆகிய இரு புகைப்படக் கலைஞர்கள் சக்லேஷ்புரா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவதால், சுற்றுலாத் தலங்களில் கலைஞர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது.

சக்லேஷ்புரா காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, வன்முறையில் ஈடுபட்டதாகக் கருதப்படும் 7 இளைஞர்களைக் கைது செய்துள்ளனர். வழிபாட்டுத் தலங்களில் புகைப்படம் எடுக்கும்போது உள்ளூர் கலாச்சாரம், மரபுகளை மதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள அதிகாரிகள், அதேவேளையில் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு வன்முறையில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் எச்சரித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட புகைப்படக் கலைஞர்களுக்கு ஆதரவாகப் பல்வேறு சங்கங்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், கோவில்களில் இது போன்ற பிடிப்புகளுக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அப்பகுதியில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கக் கூடுதல் பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset