நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மாணவியைக் காதலிப்பதாகக் கூறிய பேராசிரியருக்குச் செருப்படி; வைரலாகும் காணொலி

பெங்களூரு:

பெங்களூரு ஊரக மாவட்டம், நெலமங்கலா அருகே உள்ள ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவ அறிவியல் ஆய்வு நிறுவனத்தில், வகுப்பறையிலேயே மாணவி ஒருவரிடம் பேராசிரியர் தனது காதலைத் தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முஹம்மத் என்று அடையாளம் காணப்பட்ட அந்தப் பேராசிரியர், வகுப்பில் இருந்த அனைத்து மாணவர்களுக்கும் சாக்லேட்டுகளை விநியோகித்துவிட்டு, அங்கிருந்த ஒரு மாணவி தன்னிடம் காதலைத் தெரிவித்ததாகவும், பதிலுக்குத் தாமும் அவரை நேசிப்பதாகவும் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

பேராசிரியரின் இந்தத் திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, உடனடியாக அதனை மறுத்தார். "நான் எப்போது உங்களிடம் காதலைச் சொன்னேன்?" என்று அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியபோது, அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக அந்தப் பேராசிரியர் வாதிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவி, பேராசிரியரைச் செருப்பால் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மற்ற மாணவர்களும் ஒன்று திரண்டு அந்தப் பேராசிரியரைச் சூழ்ந்துகொண்டு தகாத வார்த்தைகளால் திட்டித் தாக்கியுள்ளனர்.

இந்த முழுச் சம்பவத்தையும் அங்கிருந்த மாணவர்கள் தங்களின் கைபேசிகளில் படம்பிடித்துள்ளனர். இது தொடர்பான காணொலிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாய்ப் பரவி வருகின்றன.

கல்லூரி வளாகமே போர்க்களம் போலக் காட்சியளித்த இந்தச் சம்பவம் குறித்து நெலமங்கலா ஊரகக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், இதுவரை இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த மாணவியோ அல்லது பேராசிரியரோ அதிகாரப்பூர்வமாக எந்தப் புகாரும் அளிக்கவில்லை என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒரு புனிதமான கல்வி நிலையத்தில் பேராசிரியரின் இத்தகைய பொறுப்பற்றச் செயலும், அதனைத் தொடர்ந்து நடந்த வன்முறையும் பொதுமக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset