நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

முகநூல் நட்பால் வந்த வினை: ஓய்வுபெற்ற அதிகாரியைக் கடத்தி கொள்ளையடித்த பெண் கைது

மும்பை: 

முகநூல் மூலம் பழகிய 61 வயது ஓய்வுபெற்ற அதிகாரியைக் கடத்தி, கொள்ளையடித்த வழக்கில், அதிதி தோகே (25) என்ற பெண்னும், அவரது கூட்டாளி சுஷில் ஜாதவ் (29) ஆகிய இருவரை கர்ஜத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

நாக்பூர் விமான நிலைய நிர்வாகப் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற பாதிக்கப்பட்ட முதியவர், அம்பேத்கர் இயக்கத்தின் சமூக ஆர்வலர்களாகச் செயல்பட்டபோது முகநூலில் அதிதியுடன் நட்புறவு கொண்டிருந்தார். கடந்த மார்ச் 9-ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்தில், கர்ஜத் இரயில் நிலையம் அருகே சந்திப்பதாகக் கூறி முதியவரைத் தனது காரில் ஏற்றிய அதிதி, திட்டமிட்டு இந்தக் கடத்தலை நடத்தியுள்ளார்.

காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென அதிதியின் இரு கூட்டாளிகள் காரில் ஏறி, முதியவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். அவரிடமிருந்த தங்கச் சங்கிலி, மோதிரங்கள், கைத்தொலைப்பேசி, ரொக்கம் என மொத்தம் 2.15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களைக் கொள்ளையடித்தனர். 

மேலும், முதியவரை ஏ.டி.எம் மையத்திற்குக் கடத்திச் சென்று, கத்தி முனையில் மிரட்டி அவரது டெபிட், கிரெடிட் கார்டுகளின் ரகசிய எண்களைப் பெற்றுப் பணத்தையும் எடுத்துள்ளனர். பின்னர் அவரை அதிதியின் வீட்டிற்குக் கடத்திச் சென்று சிறைவைத்தனர்.

மறுநாள் காலை, கடத்தல்காரர்கள் மூவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, முதியவர் சாமர்த்தியமாக அங்கிருந்து தப்பித்துச் சென்று காவல்துறையில் புகார் அளித்தார். இப்புகாரைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட கர்ஜத் காவல்துறையினர், கர்ஜத் இரயில் நிலையம், பெட்ரோல் பங்க் போன்ற இடங்களிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும், அதிதியின் முகநூல் கணக்கு, மொபைல் எண்களின் இருப்பிடத்தை (Location) தொழில்நுட்ப உதவியுடன் கண்காணித்து, புகாரளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இருவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அதிதி தோகே, சுஷில் ஜாதவ் ஆகிய இருவரையும் நீதிமன்றம் மார்ச் 13-ஆம் தேதி வரை காவல் துறையினரின் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

இவர்களின் மற்றொரு கூட்டாளியான கணேஷ் (எ) மங்கேஷ் பிரதான் இன்னும் தப்பியோடிய நிலையில் உள்ளார். முதியவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், தப்பியோடிய குற்றவாளியைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset