நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இயற்கை சீற்றத்தால் முடங்கிய சிக்கிம்: நிலச்சரிவால் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் சாலைகள் மூடல்

கேங்டாக்: 

வடக்கு சிக்கிம் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சுங்தாங் பகுதியில் சுமார் 150 முதல் 200 சுற்றுலாப் பயணிகள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். 

கேங்டாக்கிலிருந்து லாச்சென் பகுதிக்குச் செல்லும் முக்கியச் சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆனந்த் ஜெயின் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் அனைவரும் இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படை முகாம்களிலும், அங்குள்ள குருத்வாராக்களிலும் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

வானிலை சீரடைந்தவுடன் சாலைகளைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கும் என்றும், அதன் பின்னரே பயணிகள் தங்களது பயணத்தைத் தொடர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையில், லாச்சுங் பகுதியில் சீரமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டு, அங்கிருந்த பயணிகள் பாதுகாப்பாக கேங்டாக் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மறுபுறம், அண்மையில் ஏற்பட்ட இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழையினால் பாக்யோங், கேங்டாக் மாவட்டங்களில் மின்சாரக் கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

பல இடங்களில் உயர்மின்னழுத்தக் கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், நிலச்சரிவு, மழைப்பொழிவை அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset