செய்திகள் இந்தியா
ஈகைத் திருநாள் தொழுகைக்குத் தடை விதித்த அதிகாரி: இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நின்ற இந்து மக்கள்
மெயின்புரி:
உத்தரப் பிரதேச மாநிலம், மெயின்புரி மாவட்டத்திலுள்ள குரோவாலி கிராமத்தில், கடந்த மார்ச் 21-ஆம் தேதி ஈகைத் திருநாள் தொழுகையின் போது பெரும் பதற்றம் ஏற்பட்டது.
பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு ஈத்கா மைதானத்தில் தொழுகை நடத்தக் திரண்டிருந்த இஸ்லாமியர்களை, அந்தப் பகுதியின் காவல் நிலைய அதிகாரி லலித் பதி திடீரெனத் தடுத்து நிறுத்தினார்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகப் புகார் வந்துள்ளதாகக் கூறி, கூட்டத்தை கலைந்து செல்லுமாறு அவர் கட்டளையிட்டது அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தின் போது அந்த அதிகாரி ஆத்திரமடைந்து, "உங்களை இங்கேயே புதைத்துவிடுவேன்" என இந்தியில் மிரட்டல் விடுத்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தொழுகை நடத்துபவர்களுக்கும், போலிசாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த இடத்தின் பாதுகாவலர் ஷாகிர் ஹுசைன், நீண்டகாலமாக இங்குத் தொழுகை நடப்பதாகவும் இதுவரை எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டதில்லை என்றும் வாதிட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.
சூழல் மோசமடைவதைக் கண்ட அப்பகுதி ஹிந்து மதத்தைச் சேர்ந்த பொதுமக்கள், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக முன்வந்து போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். "இங்குத் தொழுகை நடத்துவதில் எங்களுக்கு எவ்வித ஆட்சபனையும் இல்லை" என அவர்கள் உறுதி அளித்ததோடு, பதற்றத்தைத் தணிக்கவும் உதவினர்.
சுமார் 20 நிமிட போராட்டத்திற்குப் பிறகு, அந்த அதிகாரி தனது பிடிவாதத்தைக் கைவிட்டதைத் தொடர்ந்து, இஸ்லாமியர்கள் ஈகைத் திருநாள் தொழுகையை அமைதியாக நிறைவேற்றினர். மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் இந்தச் சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 10:35 am
இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்பம்: தெலங்கானா வெயிலில் 16 பேர் பலி
May 22, 2026, 11:06 pm
டில்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலையை அறிவித்த ஏர் இந்தியா
May 21, 2026, 5:38 pm
மோடியை பாம்பாட்டியாக காட்டிய நார்வே நாளிதழின் கேலிச்சித்திரம்
May 20, 2026, 11:48 am
மோடியிடம் கேள்வி கேட்ட நார்வே செய்தியாளர் இன்ஸ்டா, முகநூல் பக்கங்கள் முடக்கம்
May 19, 2026, 8:19 pm
