நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

பசுமை தொழில்நுட்பத்தில் ஜொகூர் முன்னிலை: ‘ZData’ மையத்திற்கு சான்றிதழ் வழங்கல்

ஜொகூர் பாரு: 

சீனாவைச் சேர்ந்த ‘ZData’ குழுமம் உருவாக்கிய பெரிய அளவிலான தரவு மையம், மலேசியாவில் கட்டிடங்களுக்கான உயர்ந்த பசுமை நிலைத்தன்மை தரமாகக் கருதப்படும் பசுமை மதிப்பீட்டு “பிளாட்டினம்” சான்றிதழைப் பெற்றுள்ளது. 

இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட தரவு மையங்களில் சுற்றுச்சூழல் நட்பு கட்டமைப்புக்கான புதிய அளவுகோல் உருவாகியுள்ளது. இந்த தரவு மையம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட மறுசுழற்சி நீரைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதனால் குடிநீர் விநியோகத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லாமல், மக்களின் நீர் பயன்பாட்டுடன் போட்டி ஏற்படாது என நிறுவனம் தெரிவித்துள்ளது. குளிரூட்டும் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் நீர், சிறப்பு சுத்திகரிப்பு முறையின் மூலம் மறுசுழற்சி செய்யப்பட்ட நீரிலிருந்து பெறப்படுகிறது.

சுமார் 8 பில்லியன் ரிங்கிட் மதிப்பில் 38 ஏக்கர் பரப்பளவில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டம் முழுமையாக முடிவடைந்து 2026 மார்ச் மாதத்தில் செயல்பட தொடங்க உள்ளது. 

இரண்டாம் கட்டம், இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. இது 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் செயல்பட தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முழுத் திட்டமும் 2027 இறுதிக்குள் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த தரவு மையம் சுத்தமான ஆற்றல் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் சூரிய சக்தி வழங்குநர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் சுமார் 630,000 மெகாவாட் மணி புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த திட்டம் ஜொகூரை தென்கிழக்காசியாவில் முக்கிய தரவு மைய மையமாக மாற்றுவதுடன், உள்ளூர் இளைஞர்களுக்கு உயர்திறன் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset