நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரமலான் சந்தைகளில் சட்டவிரோத தொழிலாளர்கள்?: தீவிர கண்காணிப்பில் குடிநுழைவுத் துறை

காஜாங்:

நாடு முழுவதும் நடைபெறவுள்ள ரமலான் சந்தைகளில் சட்டவிரோதக் குடியேரிகள்(PATI) வியாபாரத்தில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய கண்காணிப்பு, அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த உள்ளதாக மலேசிய குடிநுழைவு துறை (JIM) தெரிவித்துள்ளது.

முறையான அனுமதி இல்லாமல் எந்த வெளிநாட்டவரும் வியாபாரம் அல்லது வேலை செய்வதைத் தடுக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக மலேசிய குடிநுழைவுத் துறையின் துணை இயக்குநர் ஜெனரல், டத்தோ லோக்மான் எஃபெண்டி ரம்லி தெரிவித்துள்ளார்.

மேலும், முதலாளிகள் சட்டவிரோத வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்தவோ அல்லது பாதுகாக்கவோ செய்தால், குடிநுழைவு சட்டம் 1959/63-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நேற்று வரை, நாடு முழுவதும் 1,700 அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சுமார் 27,000 வெளிநாட்டவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“அதிகமான வெளிநாட்டவர்களில் மியான்மர், இந்தோனேசியா, வங்காளதேசம், சீனா உட்பட மொத்தம் 6,200 பேர் பல்வேறு குடிநுழைவு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே காலகட்டத்தில், 230 முதலாளிகளும் சட்ட மீறலுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்,” என்றார் அவர்.

இதனிடையே, நேற்று இரவு சுங்கை லோங் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், 463 பேரை பரிசோதித்ததில் 51 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் மியன்மர், வங்காளதேசத்தைச் சேர்ந்த 21 முதல் 36 வயதுக்குட்பட்ட 40 ஆண்களும் 11 பெண்களும் அடங்குவர்.

“முறையானப் பயண ஆவணங்கள் இல்லாமை, விசா காலாவதி உள்ளிட்ட குற்றங்கள் கண்டறியப்பட்டன.

மேலும், தோட்டத் துறை வேலை அனுமதி பெற்ற சிலர் உணவகங்களில் பணியாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது,” என்றார் அவர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக நடவடிக்கைகளுக்காக 'Depot Imigresen KLIA'-க்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset