நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பச்சிளம் குழந்தையைக் கைவிட்டதாக நம்பப்படும் 18 வயது இளம்பெண் கைது

மலாக்கா:

இன்று தாமான் பண்டாராயா புக்கிட் செரின்டெட் பொதுக் கழிப்பறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் தாயாக இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் 18 வயது இளம்பெண்ணைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

 திருமணம் ஆகாத நிலையில் உள்ள அந்தச் சந்தேகநபர், பிரசவத்திற்குப் பின் ஏற்பட்ட இரத்தப்போக்கால் மலாக்கா மருத்துவமனையில்   சிகிச்சை பெற்று வந்தபோது கைது செய்யப்பட்டதாக மலாக்கா போலீஸ் தலைவர் டத்தோ சுல்கைரி முக்தார் தெரிவித்தார்.

அந்த இளம்பெண் தனது வீட்டில் இரவு சுமார் 8.30 மணியளவில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததாக நம்பப்படுகிறது.

“ஆரம்பக்கட்ட விசாரணையில், அப் பெண்னின் குடும்பத்தினர் அவர் கர்ப்பமாக இருந்ததை அறியவில்லை. மேலும், வீட்டிலேயே குழந்தை உயிரற்ற நிலையில் பிறந்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

“பின்னர், அவர் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொதுக் கழிப்பறையில் குழந்தையின் உடலை கைவிட்டுள்ளார்,” என்று சுல்கைரி கூறினார்.

இதற்கு முன்பு வெளியான தகவலின்படி உடைகள் இருப்பதாக நினைக்கப்பட்ட ஒரு துணிப் பையில், முழுமையாக வளர்ந்த நிலையில், தொப்புள்கொடியுடன் பெண் குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

 காலை 9.40 மணியளவில் சுத்தம் செய்யும் பணியில் இருந்தபோது, அந்தப் பை உடை மாற்றும் இடத்தில் வைக்கப்பட்டிருந்ததாகத் துப்புரவு பணியாளர் பஹாருதீன் பாசிக் (57) தெரிவித்தார்.

 குழந்தையின் பிறப்பை மறைத்து, சடலத்தை ரகசியமாக கைவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபர் குற்றவியல் சட்டம் பிரிவு 318ன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக டத்தோ சுல்கைரி   கூறினார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset