நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மடானி அரசு அனைத்து மாநிலங்களுக்கும் உரிய கவனம் செலுத்தும்:அன்வார் இப்ராஹிம்

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மடானி அரசு கிளந்தான் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும், மக்களின் நலனை மையமாகக் கொண்ட  நடவடிக்கைகள் மூலம் உரிய கவனம் செலுத்துவதைத் தொடர்ந்து உறுதி செய்யும் என்று தெரிவித்தார்.

நேற்று, கிளந்தான் முதலமைச்சர் டத்தோ மொஹ்த் நசுருதீன் தாவுத் அவர்களின் மரியாதை நிமித்தமான சந்திப்பைத் தொடர்ந்து அவர் இதனை கூறினார்.

அந்தச் சந்திப்பில், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, குறிப்பாக கிளந்தான் மக்களுக்கு உதவுவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக அன்வார் தெரிவித்தார்.

“வாழ்வாதார மேம்பாடு, பொருளாதார வாய்ப்புகளின் விரிவு,  நியாயமான, சமநிலையான வளர்ச்சியை நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

“மடானி அரசு அனைத்து மாநிலங்களுக்கும், குறிப்பாக கிளந்தானுக்கும் மக்களின் நலன், அனைவருக்கும் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில் உரிய கவனம் வழங்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

வேறொரு பதிவில், பிரதமர் பினாங்கு மாநில ஆளுநர் துன் ரம்லி ங்கா தாலிபுடன் அவரது மனைவி தோ புவான் ராஜா நூரா ஆஷிகின் ராஜா அப்துல்லாஹ் ஆகியோரின் மரியாதைச் சந்திப்பைப் பெற்றார். இந்தச் சந்திப்பு நேற்று மாலை ஸ்ரீ பெர்டானா இல்லத்தில் நடைபெற்ற தேநீர் விருந்தின்போது நடைபெற்றது.

நிதியமைச்சராகவும் உள்ள அன்வார் இந்தச் சந்திப்பு நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தியதோடு, பினாங்கின் வளர்ச்சி பாதை குறித்த கருத்துப் பரிமாற்றத்திற்கான தளமாகவும் அமைந்ததாக கூறினார்.

மேலும், மக்களின் நலன், தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு இயக்கியாக அந்த மாநிலம் விளங்கும் திறன் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset