நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வளர்ப்பு தாயின் கொடுமைக்கு உள்ளான 11 வயது சிறுமி: JKM-ஆல் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்

கூச்சிங்:

சரத்தோக் பகுதியில் வளர்ப்பு தாயின் கொடுமைக்கு உள்ளானதாகச் சந்தேகிக்கப்படும் 11 வயது சிறுமியின் வழக்கைக் கையாள பெண்கள், குடும்பம், சமூக நல மேம்பாட்டு அமைச்சகம் பாதுகாப்பு அதிகாரிகளையும் ஆலோசகர்களையும் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கு தற்போது போலீஸ் விசாரணையில் இருப்பதால், மருத்துவமனை நிர்வாகம் பாதிக்கப்பட்ட சிறுமியைச் சந்திக்க அனுமதி வழங்கவில்லை என்று அமைச்சர் டத்தோ ஸ்ரீ நான்சி ஷுக்ரி கூறியுள்ளார்.

“பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காகச் சரத்தோக் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி மாலை 6.30 மணியளவில், கணித துணைப்பாட வகுப்பிற்குக் கொண்டு செல்ல வேண்டிய பொருட்கள் குறித்து கேட்டபோது சிறுமி தன் வளர்ப்பு தாயால் குழாயால் அடிக்கப்பட்டு முகம், முதுகுப்பகுதிகளில் காயம் அடைந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமி அழுதபடி அடிபடும் சத்தம் கேட்கும் வீடியோ பதிவு ஒன்று அச்சிறுமியின் அண்டை வீட்டாரான ஆசிரியர் ஒருவருக்குக் கிடைத்ததைத் தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது என்று சரத்தோக் மாவட்ட காவல் துறை தலைவர் துணை சூப்பிரண்டெண்ட் மேத்யூ மாங்கி கூறியுள்ளார்.

அந்த ஆசிரியர் அடுத்த நாள் சிறுமியைப் பள்ளி அலுவலகத்திற்கு அழைத்து பரிசோதித்தபோது, அவளது கன்னம், முதுகில் காயங்கள் இருந்ததைக் கண்டறிந்தார்.

அச்சிறுமி, 47 வயதுடைய தனது வளர்ப்பு தாய் தன்னை இரு கன்னங்களிலும் அறைந்ததாகவும், மஞ்சள் நிற குழாயால் அடித்ததாகவும் தெரிவித்தார்.

சிறுமியின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர் பிப்ரவரி 7ஆம் தேதி போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, போலீசார் சந்தேக நபரை சரத்தோக் புங்கா ராயா சாலையில் கைது செய்து, மஞ்சள் நிற குழாயை ஆதாரமாக பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு, 2001ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டம் பிரிவு 31(1)(a)ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், சந்தேக நபரை தடுப்புக்கு காவலில் வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விசாரணை முடிந்ததும் வழக்கு ஆவணங்கள் வழக்கறிஞர் தரப்புக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset