நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சாலை விபத்தில் வன்முறை: முதியவரைத் தாக்கியச் சந்தேக நபர் கைது

காஜாங்:

சாலை விபத்தில் ஈடுபட்டதற்காக, வியாபாரி ஒருவர் பெக்கான் சுன்டெக்ஸ், பத்து 9, செராஸ் பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னல் அருகே நேற்று ஒரு முதியவரைத் தாக்கி, உதைத்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று மாலை 4.49 மணியளவில் நடந்ததாகக் காஜாங் மாவட்ட காவல் துறை தலைவர், உதவி ஆணையர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்துள்ளார்.

69 வயதுடைய ஓய்வுபெற்ற முதியவர் ஒருவர், சம்பவ இடத்தில் தன்னை ஒருவர் தாக்கி மிரட்டியதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவரது வாகனத்திற்கும் சந்தேகநபரின் வாகனத்திற்கும் இடையே ஏற்பட்ட சிறிய விபத்தே இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, 52 வயதுடைய அந்தச் சந்தேகநபர் நேற்று இரவு 11.30 மணியளவில் காஜாங்கில் கைது செய்யப்பட்டார்.

விசாரணைக்காக அவரை இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்த வழக்கு, குற்றவியல் சட்டத்தின் பிரிவு 323 (காயப்படுத்தல்) கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக ஒரு ஆண்டு சிறைத்தண்டனை அல்லது RM2,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மேலும், கொலை மிரட்டல் விடுத்ததற்காகப் பிரிவு 506 கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

இந்தச் சம்பவம் தொடர்பான தகவல் உள்ளவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்புகொள்ளலாம் அல்லது விசாரணை அதிகாரி சார்ஜெண்ட் கணேசன் ராமச்சந்திரனை 012-6089180 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

பொதுமக்கள் சட்டங்களை மதித்து, பொறுப்புடன் நடந்து கொண்டு, சமூக ஒற்றுமையையும் பொது அமைதியையும் நிலைநிறுத்த உதவ வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

- சங்கீர்த்தனா

 

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset