நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காசநோய்ப் பரவல்: 33 பேருக்கு தொற்று உறுதி

கோலாலம்பூர்:

கோத்தா திங்கியில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி காசநோய் (டிபி) தொடர்பான ஒரு குழுமத் தொற்று ஏற்பட்டதாகச் சுகாதார அமைச்சகம் (KKM) உறுதி செய்துள்ளது.

பிப்ரவரி 4ஆம் தேதி வரை 804 நெருங்கிய தொடர்புடையவர்களைப்  பரிசோதித்ததில், 33 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நோய் பரவலைக் கட்டுப்படுத்தச் சுகாதார அமைச்சின் குழு தற்போது தீவிர முயற்சியில் செயல்பட்டு வருவதாகச் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கெஃப்லி அக்மத் தெரிவித்தார்.

“தொற்று உறுதி செய்யப்பட்ட அனைத்து நோயாளிகளும் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின் உடல்நிலை சுகாதார அமைச்சின் கண்காணிப்பில் உள்ளது,” என்று அவர் X சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாகச் சிகிச்சை பெறுவதும், மருத்துவர் நிர்ணயித்த பின்தொடர் சந்திப்புகளில் பங்கேற்பதும் மிகவும் அவசியமாகும்.

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை நிறுத்தக்கூடாது என்றும், இல்லையெனில் கடுமையான  நோய் பரவல் அபாயம் அதிகரிக்கும் என்றும் சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.

காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய தொடர்புடையவர்களில் 5 முதல் 10 சதவீதம் பேர் இரண்டு ஆண்டுகளுக்குள் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஒரே வீட்டில் வசிப்பவர்கள், அடிக்கடி நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள், ஒரே வாகனத்தில் பயணிப்பவர்கள், சமூக நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள் அல்லது ஒரே நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் அதிக ஆபத்து உள்ளவர்களாக கருதப்படுகின்றனர்.

எனவே, பொதுமக்கள் முன்கூட்டியே பரிசோதனை செய்யுமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர். மருத்துவ பரிசோதனை, அறிகுறி மதிப்பீடு, ட்யூபர்குலின் தோல் சோதனை, IGRA இரத்த பரிசோதனை, கப பரிசோதனை, மார்பு எக்ஸ்ரே ஆகியவை அடங்கும். இதன்மூலம் ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

காசநோய் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு ஆறு மாதங்கள் சிகிச்சை வழங்கப்படும். மறைமுக காசநோய் (Latent TB – LTBI) உள்ளவர்களுக்கும் ஆறு மாதங்கள் சிகிச்சை அளிக்கப்படும்.

நோய் இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு, இரண்டு ஆண்டுகளில் நான்கு முறை பின்தொடர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset