நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செராஸில் நடந்த சோதனையில் 152 வெளிநாட்டவர்கள் கைது: அனுமதி இல்லாத அன்னியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய முதலாளிகளும் கைது 

கோலாலம்பூர்:

செராஸ் பகுதியில் உள்ள லிங்காரன் SV2-இல் அமைந்துள்ள பிரபல பேரங்காடியில், மலேசிய குடிநுழைவு துறை (JIM) நடத்திய திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது. அப் பேரங்காடியில் உள்ள ஹாங்காங் தெரு வழித்தடம் போல் அமைந்த உணவகப் பகுதி இந்த சோதனையில் இலக்காகியது.

நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்தச் சோதனை நடவடிக்கையில், அங்கு உள்ள கடைகளில் மலாய் மொழியில் எந்த விளம்பரப் பலகையும் காணப்படவில்லை. மேலும், அப் பகுதி முழுவதும் வெளிநாட்டவர்களால் நிரம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் மக்கள், சீன சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் அந்த இடம், மலேசிய அடையாளத்தைப் பிரதிபலிக்கவில்லை என்பதும் தெரியவந்தது.

இந்த சோதனையில், தப்பி ஓட முயன்றவர்கள் உட்பட மொத்தம் 150 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். பர்மிட் இல்லாத அன்னியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய முதலாளிகளும் கைது செய்யப்பட்டனர்.

JIM தலைமையகம் புத்ராஜெயா கீழ் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில் 890 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று குடிநுழைவு துணை இயக்குநர் ஜெனரல் டத்தோ லோக்மான் எஃபெண்டி ரம்லி தெரிவித்தார். 

"அவர்களில் 458 பேர் வெளிநாட்டவர்கள், 432 பேர் உள்ளூர் குடிமக்கள். பரிசோதனையில் 152 பேர் பல்வேறு குடிநுழைவு சட்ட மீறல்களில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

“அடையாள ஆவணங்கள் இல்லாதது, விசா விதிமுறைகளை மீறியது, அனுமதி காலம் முடிந்தபின் தங்கியிருந்தது, அங்கீகரிக்கப்படாத அட்டை வைத்திருந்தது போன்ற குற்றங்கள் கண்டறியப்பட்டன,” என்றார் அவர்.

கைது செய்யப்பட்டவர்களில் மியான்மர் நாட்டவர்கள் 94 பேர், சீனர்கள் 38 பேர், இந்தோனேசியர்கள் 6 பேர், வங்காள தேச நாட்டவர்கள் 2 பேர், பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் அதில் உள்ளனர் என்று அவர் கூறினார்.

மேலும், சட்டவிரோதமாக வெளிநாட்டவர்களை பணியில் அமர்த்தியதாகச் சந்தேகத்தின் பேரில் சில முதலாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட  அந்நியத் தொழிலாளர்களின் வயது 21 முதல் 42 வரை உள்ளதாகவும், சில ஆவணங்கள் போலியானவை என சந்தேகிக்கப்பட்டதால் மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சில வெளிநாட்டவர்கள் சட்ட நடவடிக்கைகளில் இருந்து ‘தப்பிக்கிறார்கள்’ என்ற குற்றச்சாட்டுகளை மறுத்த லோக்மான், குடிநுழைவு துறை எந்தவித சமரசமும் செய்யாது என்று வலியுறுத்தினார்.

“குடிநுழைவு, பாஸ்போர்ட் சட்டத்தை மீறுபவர்கள் மேல் பாராபட்சம் இன்றி  நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார் அவர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக விசாரணை, சட்ட நடவடிக்கைக்காக KLIA குடிநுழைவு தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset