நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியனும் இந்திய முஸ்லிமும் ஒரே இனமடா: ஆலயம் கட்டுவதற்கு தடை, இனப் பிரிவு குறித்து ஆட்சிக் குழு உறுப்பினர்களை டத்தோஸ்ரீ சரவணன் கவிதையால் கடுமையாக சாடினார்

கோலாலம்பூர்:

ஆலயம் கட்டுவதற்கு தடை, இனப் பிரிவு குறித்து இரு ஆட்சிக் குழு உறுப்பினர்களை மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ  சரவணன் கவிதையால் கடுமையாக சாடினார்.

கவிதையின் முதல் பகுதியில் அரசாங்க நிலத்தில் இந்து கோவில்கள் கட்டுவதற்கு ஐந்து ஆண்டு கால தடை விதிக்கப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டதற்கு எதிராக பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசனை அவர் சாடியுள்ளார்.

பிற்பாதி கவிதை பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ எஸ். சுந்தரராஜூவை நோக்கி திரும்பியது.

அவர் சமீபத்தில் இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு சொத்து வாங்குவதில் ஐந்து சதவீத தள்ளுபடியை அறிவித்திருந்தார் - 

இதில் இந்து,  இந்தியர்கள் தவிர்க்கப்பட்டுள்ளனர். இது இனத்திற்குள் பாகுபாடு காட்டப்படுவதாக அவர் சாடியுள்ளார்.

டத்தோஸ்ரீ சரவணனின் கவிதை பின்வருமாறு,

ஊசி போன ஊசி

ஊசியை நம்பி ஊசிப்போன சமுதாயமே 
அரசு நிலத்தில் ஆலயம் கட்ட  ஐந்தாண்டு அவசரத் தடை என்றான் ஊசி ஒருவன்,

ஆட்சியின் மமதையில் “அது” தந்த போதையில் ,
அடே, அது அரசு நிலம் ஆவதற்கு முன்பே,
ஆண்ட ஆங்கிலேயன் எங்கள் முன்னோருக்கு,
ஆலயம் கட்ட அனுமதித்த இடமடா.

இனிமேல் எங்கள் இனம் 
ஆகாயத்தில் ஆலயம் கட்டட்டும்!

ஆனால் நீ எங்கே சென்று ஓட்டு கேட்பாய்?

ஓ ஓ நீதான் ராக்கெட் வைத்திருக்கிறாயே
ரகசியமாய் வருவாய் எங்களை நோக்கி,
மறந்தும் சொல்லி விடாதே மாற்ற வந்தவன் என்று!

எங்களுக்குத் தெரியும் நீ ஏமாற்ற வந்தவன் என்று,
மாரியாத்தாள் சொல்லி விட்டாள்.

நீ தான் மாற்றப்பட வேண்டியவன் என்று!

ஆண்டவன் பிரச்சனை அடங்குவதற்குள் 
இன்னொரு ஊசியின் உன்னத அறிவிப்பு!
நாசிக்கு (Nasi) இல்லை விலக்கு
நாசிகண்டருக்கு ஐந்து சதவீதம் விலக்கு?

அடப்பாவிகளா இனி இந்த சமுதாயம் 
உங்களைத்தான் தள்ளுபடி செய்ய வேண்டும்.

நாசியும் நாசிகண்டாரும் ஒரே இனம்தான் என்று உணராத உங்களுக்கா 
ஒட்டுமொத்த இந்தியனும் வாக்களித்தான்?

ஒருவேளை இது கூட உனக்குப் புரியாது அதனால் உரக்கச் சொல்லுகிறேன் கேள்,
இந்தியனும் இந்திய முஸ்லீமும் எப்போதும் ஒரே இனமடா.

மதம் வேறுபட்டாலும் மனத்தால் ஒன்றுபட்ட இனமடா.

5% என்று சொல்லி ஆட்டையும் ஆட்டு குட்டியையும் பிரிக்கும் அற்ப பதர்களே 
அப்துல் காதரும் அமாவாசையும் அண்ணன் தம்பிகளடா!

ஆமாம் ஆமாம் உனக்கெப்படி தெரியும் இந்தியன் பெருமை, தமிழன் நிலமை 
நீ தான் சீனன் கடையில் பெட்டிக் கடை நடத்தும் குட்டி (புட்டி) ராஜாவாயிற்றே.

முன்பு ஆண்டவனாவது எங்களுக்கு வேட்டி தந்து வேலை வாங்கினான் 
ஊசி நீயோ இருந்த கோவணத்தையும் உருவுகின்றாயே .

என்ன தமிழா சங்கமும் மன்றமும் எங்கே என்று கேட்கின்றாயா?

அவர்கள் மானியம் கேட்டு மனு செய்துள்ளார்கள், அது வரும் வரை வாய் திறக்க மாட்டார்கள்.

வைரமுத்து என்ற தமிழன் வந்தால் வாயை வாடகைக்கு விடுவார்கள் 
வராதே வராதே என்று,

என் இனம் எடுத்த தவறான முடிவிலிருந்து அனுபவம் கிடைத்தது இன்று,
இனி வரும் தேர்தலில் நல்ல முடிவுகள் அந்த அனுபவத்தால் கிடைக்கட்டும்.

இவ்வாறு தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் தனது கவிதையில் நாட்டு நடப்பை சாடியுள்ளார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset