
செய்திகள் மலேசியா
ஐயா செ. சீனி நைனா முகம்மது தொல்காப்பியத் திருக்கோட்ட உருவாக்கத் திருப்பணி அறிமுக விழா
பினாங்கு:
மலேசியத் திருநாட்டில் மட்டுமல்லாது உலகளாவிய நிலையிலும் தமிழ்மொழிச் சார்ந்த இலக்கண இலக்கியத்திலும் தொல்காப்பிய ஆய்விலும் நனிசிறந்து விளங்கியதோடு அதன் உட்பொருளை எளிய நடையில் வழங்குவதில் வல்லமைப் பெற்றவர் 'இறையருட் கவிஞர்' செ. சீனி நைனா முகம்மது அவர்கள்.
'நல்ல தமிழ் இலக்கணம்', 'புதிய தமிழ்ப்புணர்ச்சி விதிகள்', 'தொல்காப்பியக் கடலில் ஒரு துளி' , போன்ற நூல்களின் வழி தமிழ் இலக்கணத்தின் சுவையை எளிய இனிய முறையில் உணர்த்திய பெருமை அன்னாரையே சாரும்.
'இறையருட் கவிஞர்' மறைந்து 11 வருடங்கள் கடந்துவிட்டாலும் அவரின் ஆழ்ந்த அகன்ற தொல்காப்பிய அறிவை வருங்காலத் தலைமுறையினர் உய்த்துணரும் நோக்கத்தில் ஈப்போ தமிழ்க் குறிஞ்சித் திட்டுக் கழகம் தனியொரு செயற்குழுவை அமைத்து அதன் தொலைநோக்குத் திட்டமாகப் பேரா ஜெலாபாங்கில் 'செ.சீனி நைனா முகம்மது தொல்காப்பியத் திருக்கோட்டம்' அமைக்கும் திருப்பணி மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இதன் அறிமுக விழாவானது பினாங்கில் கடந்த சனிக்கிழமையன்று (02.06.2025) இளைய முஸ்லீம் விளையாட்டு மைய மண்டபத்தில் நடைபெற்றது.
மலேசியத் தமிழ் வரலாற்றில் தமிழறிஞரான ஐயா செ.சீனி நைனா முகம்மது அவர்களுக்குதான் முதன் முறையாக திருக்கோட்டம் அமைக்கப்படவுள்ளது.
இத் திருக்கோட்டம் ஈப்போ ஜெலாப்பாங் நகரில் 502 சதுர மீட்டர் நிலப்பரப்பில் இரண்டு மாடிக் கட்டடமாக அமைக்கப்படவுள்ளது. இக்
கட்டடத்தின் கீழ்ப்பகுதியில் தமிழ்வழி பாலர் வகுப்பு, கணினி அறை, நிர்வாக அறை ஆகியவற்றோடு மேல்மாடியில் பா.மு.அன்வார் நூலகமும், காப்பியன் நினைவகமும், கோ.சாரங்கபாணி சிறிய பொது மண்டபமும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக இத் திட்டத்தின் தலைவரும் சொத்து நிர்வகிப்பாளருமான மேனாள் விரிவுரைஞருமான திரு.ப.தமிழ்மாறான் தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டு முதலே ஜெலாபாங்கில் கடையொன்றின் மேற்புறத்தில் வாடகைக்கு செயல்படத் தொடங்கிய தொல்காப்பியத் திருக்கோட்டமானது தமக்கென நிரந்தரமான நினைவிடத்தை தமிழின் அடையாளமாக நிறுவும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதே இத்திட்டமென செயலாளரான திரு பிரபு கிருஷ்ணா கூறினார்.
தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு மீது ஈடுபாடும் நம்பிக்கையும் பண்பும் செறிந்த பாலர் பள்ளியை அமைப்பதே தலையாய நோக்கம் என்றும் எதிர்காலச் சூழலில் பொருட் சிக்கலின்றி தானாகவே செயற்பட இது வழிவகுக்கும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இறையருட் கவிஞரின் வளர்ப்பு மகனான திரு.பிரபு கிருஷ்ணா ஐயாவின் படைப்புகள், கவிதைகள், ஆய்வுகள், அறிவு நூல்கள், பயன்படுத்திய பொருட்கள் என அனைத்தையும் இவர் தற்போதைய இடத்தில் அரும்பாடுபட்டு திரட்டி வைத்துள்ளார். புதிதாக அமைக்கப்பெறும் நினைவகத்தில் இவையனைத்தும் காட்சிக்கு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பினாங்கு மாநில இளைய முஸ்லீம் விளையாட்டு மைய மண்டபத்தில் (YMSC) நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் ஹாஜி முனவர் சதீக் அவர்கள் தலைமையேற்றார். சிறப்பு பிரமுகர்களாக ஹாஜி பஹாருதின், பினாங்கு மாநில மஸ்ஜித் கப்பித்தான் கெலிங் தலைவர் டத்தோ ஹாஜி ஃபாரூக், ஈமான் பேரவைத் தலைவர் ஷாஹுல் ஹமித், முஸ்தக்கிம் இயக்கத்தின் தலைவர் அப்துல் ஹமித், திரு தியாகராஜன், டத்தின் சரஸ்உட்பட பல முக்கிய பிரமுகர்கள் சிறப்பு முகாமையராகக் கலந்து கொண்டனர்.
இந்தத் தொல்காப்பியத் திருக்கோட்டம் உருவாக்க பெருந்தொகை ரி.ம.850,000.00 தேவைப்படுகின்றது. இதைக் கருத்தில் கொண்டு ஏற்பாட்டுச் செயற்குழுவினர் 1 பாகம் (plot) ரி.ம 1,000.00 என வரையறுத்திருந்தனர்.
இந்த அறிமுக விழாவில் கொடை நெஞ்சர் ஹாஜி பஹாருதின் அவர்கள் 10 பாகம் பெற்று இனிதே தொடக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து YMSC மையம் 5 பாகமும் பினாங்கு மாநில மஸ்ஜித் கப்பித்தான் கெலிங் 5 பாகமும், முஸ்தாக்கிம் இயக்கம் 5 பாகமும், டத்தின் சரஸ் 1 பாகமும் பெற்று ஆக மொத்தம் 26 பாகம் பினாங்கில் பெற்று பேராதரவு அளித்தது போற்றுதற்குரியது.
தொல்காப்பியத் திருக்கோட்ட உருவாக்கச் செயற்குழுவின் ஆலோசகராக விளங்கி வருபவர் டத்தோ ஸ்ரீ முகம்மது இக்பால் அவர்கள்.
பினாங்கில் நடைபெற்ற அறிமுக விழாவில் வருகை புரிந்த அனைவரின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க ஹாஜி பஹாருதின் அவர்களும் மற்றுமொரு ஆலோசகராக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து நாடு தழுவிய நிலையில் நன்னெஞ்சங்களை நாடி இந்தச் செயல்திட்டத்தை விரைவில் ஈடேற்றம் செய்ய ஏற்பாட்டுக் குழுவினர் ஊக்கத்தோடு தெரிவித்தனர்,
- தி.கிரிஷன்
தொடர்புடைய செய்திகள்
June 8, 2025, 1:30 pm
ஃபஹ்மி ரேசாவின் பயணத் தடை குறித்து விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு
June 8, 2025, 12:33 pm
காஸாவின் அமைதிக்கு ஆசியான், வளைகுடா நாடுகள் ஒத்துழைப்பு தேவை: பிரதமர்
June 8, 2025, 12:01 pm
படகு கவிழ்ந்த சம்பவத்தில் மரணமடைந்த கணவன் - மனைவியின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன
June 8, 2025, 11:57 am
லுமுட்டில் குர்பான் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆடவர் மரணம்
June 8, 2025, 11:46 am
தியோ பெங் ஹாக் வழக்கில் குற்றச்சாட்டுகளைத் தொடருமாறு சட்டத்துறை தலைவருக்கு ஜசெக வலியுறுத்து
June 8, 2025, 11:39 am