நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்து, முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் தமிழ் மொழி எந்நாளும் நிலைத்து நிற்க வேண்டும்: டான்ஸ்ரீ  விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

மலேசியாவில் இந்திய சமுதாயத்தில் நிலவும் இந்து, முஸ்லிம் ஒற்றுமை என்றென்றும் நீடிக்க வேண்டும் என்று மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ  ச.விக்னேஸ்வரன் தனது நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

நம்மை ஒன்றிணைக்கும் தமிழ் மொழியும் எந்நாளும் நிலைத்து நிற்க வேண்டும் என்ற சிந்தனைகளுடன் மஇகாவின் சார்பிலும், தனது தனிப்பட்ட சார்பிலும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தனது நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

புனிதமான ரம்லான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பிருந்து, பசியை உணர்ந்து, இறைசக்தியையும் பூரணமாக அனுபவித்து, ஹரிராயா நோன்புப் பெருநாளைக்  நமது முஸ்லீம் இன சகோதர, சகோதரியர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

இந்தாண்டு நோன்புப் பெருநாளை முன்னிட்டு மஇகாவும் அங்கம் வகிக்கும் ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார். 

இதில் முக்கிய அம்சம் டோல் கட்டணம் இலவசம் என்ற செய்தி மக்களுக்கு இதமாக இருந்திருக்கும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார். 

பெருநாள் விடுமுறைகளின்போது வாகனங்களில் வெளியூர்களுக்குப் பயணம் செய்பவர்கள் பாதுகாப்புடன் செல்லுமாறும், சாலைகளில் பொறுமையையும், கவனத்தையும் கடைப்பிடிக்குமாறும் அவர் நினைவூட்டினார்.
 
இஸ்லாம் எங்கள் வழி, இன்பத் தமிழ் எங்கள் மொழி’ என்ற முழக்கத்துடன் தமிழ் மொழி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட எண்ணற்ற முஸ்லீம் அன்பர்களை நாம் கண்டிருக்கிறோம்.  

அரசியலிலும் மஇகாவின் வழி, பல இந்திய முஸ்லிம் நண்பர்கள் நம்முடன் இணைந்து அரசியல் பயணம் மேற்கொண்டு நமது இந்திய சமுதாய நலன்களுக்காக இணைந்து போராடியிருக்கிறார்கள்.

மலேசியாவில், இந்தியச் சமுதாயத்தில் நிலவும் இந்து, முஸ்லீம் ஒற்றுமை என்றென்றும் நீடிக்க வேண்டும் என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன் 

 

தொடர்புடைய செய்திகள்

+ - reset