நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாய்மொழியைப் போற்றுவதுடன்  பிற மொழிகளை மதிப்போம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

பன்மொழிக் கல்வி என்பது புதிய தலைமுறையினருக்கு இடையேயான கற்றலின் தூண் என்பதை, 2024 பன்னாட்டு தாய்மொழி தினத்திற்கான கருத்தாக யுனெஸ்கோ மன்றம் பிரகடனப்படுத்தி உள்ளது.

அந்த வகையில், பல இன- பன்மொழி- பல்கலாச்சார- பல சமயக் கூறுகளைக் கொண்ட மலேசிய கூட்டு சமுதாய மக்கள் அனைவரும் தத்தம் தாய்மொழியைப் போற்றவும் அதேவேளை பிற மொழிகளை மதிக்கவும் உறுதி ஏற்போம் என்று ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக வேந்தர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதருக்கும் தாய் மொழி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்னும் சிந்தனையை உள்ளீடாக வைத்து ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ஆம் நாள், உலகத் தாய்மொழி தினமாக உலக அளவில் கொண்டாடப்படுகிறது.

மனிதர்கள் நாகரிக வாழ்வை எட்டி, நவீன கருவிகளைக் கையாண்ட போதிலும் ஆண்டுதோறும் எண்ணற்ற மொழிகள் வழக்கொழிந்து வருகின்றன.

உலக மயமாதல், சிறுபான்மை மக்களை பெரும்பான்மையினர் ஒடுக்குவது, தம் தாய்மொழி குறித்த அக்கறையின்மை என்றெல்லாம் மொழிகள் அழிவதற்கான பல காரணங்களை ஐநா மன்றத்தின் யுனெஸ்கோ அமைப்பு பட்டியல் இட்டுள்ளது.

தாய் மொழிக்காக போராடிய வரலாறு கொண்டவர்கள் வங்கதேசத்தவர்கள் ஆவர். வங்கமொழிக்கும் வங்காள மக்களுக்கும் எதிராக பாகிஸ்தான் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையை டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் நெஞ்சுரத்துடன் எதிர்த்து நின்றனர்.

அவர்களில் நான்கு பேர், 1952 பிப்ரவரி 21-ஆம் நாளில் பாகிஸ்தான் இராணுவத்தினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாயினர். 

அதன்பிறகு நிலைமை மேலும் முற்றவே, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிட்டன. 

குறிப்பாக, இந்தியா கிழக்குப் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்து வங்காள தேசம் என்னும் நாடு உருவாக துணை போனது.

ஒரு நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட பிப்ரவரி 21 சம்பவம், துன்ப நிகழ்வாக இருந்தாலும் தங்களின் தாய்மொழிக்கான உயிர்நீத்த அந்த வீர மாணவர்களின் மாண்பைப் போற்றும் வகையில் இந்த நாளை உலகத் தாய்மொழி தினமாக யுனெஸ்கோ பிரகடனம் செய்துள்ளது.

இதன் அடைப்படையில், மலேசியர்களாகிய நாமும் உலக மக்களைப் போல சொந்த மொழியைப் போற்றி மற்ற மொழிகளை மதிக்கும் சிந்தனையை நம் மனதில் பதிய வைப்போம் என்று மஇகா தேசியத் தலைவருமான எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தன்னுடைய உலக தாய்மொழி நாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset