நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

நிலவில் உறக்க நிலையிலுள்ள லேண்டர், ரோவர் மீண்டும் இயங்குமா?: முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள்

பெங்களூரு : 

நிலவில் உறக்க நிலையிலுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கலன்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னெடுத்துள்ளனர்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர், ‘பிரக்யான்’ ரோவர் வாகனம் ஆகியவை கடந்த மாதம் 23-ஆம் தேதி நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டன. 

லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தபடியும், ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்றும் 12 நாட்கள் ஆய்வு செய்து பலஅரிய தகவல்களை நமக்கு அனுப்பின. 

அதன்மூலம் நிலவின் வெப்பநிலை, அங்குள்ள தனிமங்கள், நிலஅதிர்வின் தன்மை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் கண்டறியப்பட்டன.

இதற்கிடையே, நிலவின் தென்துருவப் பகுதியில் இரவு சூழல் வந்துவிட்டதால் ரோவர், லேண்டர் கலன்களின் இயக்கமானது முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டு அவை உறக்க நிலையில் (ஸ்லீப்பிங் மோடு) வைக்கப்பட்டன. 

ஏனெனில், லேண்டர், ரோவர்கலன்கள் சோலார் பேனல்கள் மூலம் கிடைக்கும் சூரிய ஒளி மின்சக்தியை கொண்டே இயங்குகின்றன. 

இரவு நேரத்தில் அவற்றால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாதுஎன்பதால் இரு கலன்களும் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு, அவை உறக்க நிலைக்கு மாற்றப்பட்டன.

நிலவில் பகல் பொழுது வந்ததும் லேண்டர், ரோவர் கலன்களைச் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது. 

அதன்படி தென்துருவப் பகுதியில் தற்போது சூரிய உதயம்தொடங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

இந்நிலையில், திட்டமிட்டபடி லேண்டர், ரோவர் கலன்கள் இன்று செப்டம்பர் 22-ஆம் தேதி மீண்டும் உயிர் பெறுமா என அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். 

அதற்கான முன்னேற்பாடுகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நிலவில் இரவு நேரத்தில் மைனஸ் 200 டிகிரிக்கு மேலாககுளிர்நிலை இருக்கும். அதனால் லேண்டர், ரோவரில் உள்ள சாதனங்கள், இயந்திரங்கள் குளிர்ந்த சீதோஷ்ண சூழலில் சேதமடையாமல் மீண்டும் இயங்க வேண்டும். 

அதற்கான சில முன்தயாரிப்புகளை இஸ்ரோ செய்திருந்தாலும், அவை முழுமையாக பலன் தரும் என்று கூறமுடியாது.

எனவே, ரோவர், லேண்டர் ஆகியவை கடுமையான வானிலையிலிருந்து தப்பித்து மீண்டும் இயங்கவேண்டும் என்பதே விஞ்ஞானிகள், அறிவியல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.

-அஸ்வினி செந்தாமரை  
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset