
செய்திகள் உலகம்
முஸ்லிம் சமூகம் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முன் வாருங்கள்: உலமா சபை நூற்றாண்டுவிழாவில் இலங்கை அதிபர் ரணில் அழைப்பு
கொழும்பு:
75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு பலம் வாய்ந்த உண்மையான இலங்கையர்களாக ஒன்றிணையுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க அனைத்து சமூகங்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
எந்தவொரு சமயமும் நவீன உலகுடன் இணைந்து செல்ல வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி, எந்த சமயமும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் சமயம் அல்ல எனவும் தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வசேத மாநாட்டு மண்படத்தில் நடைபெற்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் 100வது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றுகையிலே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதிபர் கூறியதாவது:
உலமா சபை இன்று தனது 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. இது அவர்களது நூற்றாண்டு விழாவாகும். இச்சந்தர்ப்பத்தில் நாம் ஆரம்பத்தை நினைவுக்கூற வேண்டும். முதலாவது உலக யுத்தத்துக்குப் பின்னர் உலகம் மிகப் பெரிய மாற்றத்துக்கு முகம்கொடுத்து வந்த காலகட்டமே 1922 ஆம் ஆண்டாகும்.
இக்காலப்பகுதியில் கலீபா ஆட்சி முறையை ஒழிக்கும் நடைமுறையும் உள்ளடக்கப்பட்டிருந்தது. கலீபா ஆட்சிமுறையை இல்லாதொழிப்பதற்கு இந்தியா மிகப் பெரிய இயக்கமொன்றைக் கொண்டிருந்தது. ஆனால் இலங்கையில் அதே காலப்பகுதியில் தான் முஸ்லிம்களின் எண்ணங்களதும் சிந்தாந்தத்தினதும் மையமாகச் செயற்படும் உலமா சபை எனும் அமைப்பை ஸ்தாபிக்கப்பட்டது. எனினும் அப்போதிருந்த சில பிரச்சினைகளுக்கு நாம் இன்றும் முகம்கொடுக்க நேரிட்டுள்ளது.
நாம் இப்போது வித்தியாசமானதொரு உலகத்தில் வசிக்கின்றோம். 1922 ஆம் ஆண்டில் 150 நாடுகளும் அப்போது இருக்கவில்லை. நாம் புதிய நூற்றாண்டில் வசிக்கின்றோம். விஞ்ஞான தொழில்நுட்ப அபிவிருத்தி, அரசியல் உரிமைகளின் முன்னேற்றம் என்ற இந்தப் பின்னணியில் நாம் இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும்.
இஸ்லாம் மட்டுமன்றி அனைத்து சமயங்களுமே தமது சமயத்தின் அடிப்படைகளையே பார்க்கின்றன.
சமயம் கூறும் தூய்மையான அர்த்தங்கள் எவை? அவற்றை எவ்வாறு நவீன உலகத்துடன் இணைப்பது?
சமயத்தின் அடிப்படையை நீங்கள் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கு பயன்படுத்த வேண்டும். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் பௌத்தம். புத்த பெருமான் கங்கைக் கரைகளில் இருந்து பௌத்த மதத்தைப் போதிக்கும்போது கரையோர நகரிகமே இருந்தது. எனினும் அது இலங்கைக்கு கொண்டுவரப்பட்டபோது பௌத்த சமயத்தில் ஓரளவு அடிப்படையைக் கொண்டிருந்த கரையோர நாகரீகத்தை கட்டியெழுப்ப எம்மால் முடிந்தது.
அது கௌதம புத்தருடைய காலத்தில் இல்லை என்பதற்காக நாம் இந்த நாகரீகத்தை நிராகரிக்கவில்லை. எனினும் எம்மால் அந்த நாகரீகத்தை ஏற்றுக்கொள்ள முடிந்தது.
அதுபோன்றே, நாம் அனைவரும் நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டே எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும்.
எமது சமயத்தின் அடிப்படையைப் பார்ப்பதற்கு கடந்த காலம் எமக்கு உதவியாக அமையும். எந்தவொரு சமயமும் வெறுப்புச் சமயம் அல்ல. அது வெறுப்புச் சமயமாக இருக்கவும் முடியாது. அது நிச்சயமாக இரக்கமானதாகவே இருக்க வேண்டும்.
மோசஸுக்கு அங்கீகாரம் வழங்கிய, கிறிஸ்துவுக்கு அங்கீகாரம் வழங்கிய, நபிகள் நாயகத்துக்கு அங்கீகாரம் வழங்கிய சமயம் வெறுப்புச் சமயம் என்ற அர்த்தத்தைக் கொள்ளாது. இது அன்பை அடிப்படையாகக் கொண்டதொரு சமயமாகும். இஸ்லாமும் முஹம்மது நபியும் அதனையே தொடர்ந்தும் முன்னெடுத்துச் சென்றனர்.
எனவே நாம் எந்தவொரு சமயத்தையும் வெறுப்புச் சமயமாக மாற்றக் கூடாது. எனினும் அதன் அடிப்படையைப் பாருங்கள். நாம் எவ்வாறு ஒன்றாக வாழ்வது? நாம் எவ்வாறு பிற சமையத்தையும் பிறரையும் பார்ப்பது?
ஒவ்வொரு சமயமும் தனது சமயத்தைப் பற்றி அனைவருக்கும் போதிக்க வேண்டும்.
சமயங்களும் பாரிய பிணக்குகளுக்கு முகம் கொடுத்துச் செல்கின்றன. இஸ்லாத்தில் மட்டுமல்ல. எதிர்காலம் என்றால் என்ன என்பது தொடர்பில் இஸ்லாத்திலும் பாரிய விவாதங்களும் கலந்துரையாடல்களும் இடம்பெற்று வருகின்றன.
ஏனைய சமயங்களிலும் இந்நிலைமை காணப்படுகிறது. நீங்கள் கத்தோலிக்க தேவாலயங்களை எடுத்துப் பார்த்தால் அங்கே அருட் தந்தையின் போதனைகள் கத்தோலிக்க தேவாலயத்திலுள்ள பழமைவாத உறுப்பினர்களால் பெரிதும் சவாலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இங்கிலாந்திலுள்ள தேவாலயங்களில் தற்போது ஆண் ஓரினச்சேர்க்கை திருமணங்களை அங்கீகரிப்பதா அதனை எவ்வாறு நடத்துவது போன்ற விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
அனைத்து சமயங்களிலும் பிரச்சினைகள் உள்ளன. அது இந்து சமயமாக இருந்தாலும் சரி பௌத்த சமயமாக இருந்தாலும் சரி. +அவை என்ன என்பது பற்றியே நாம் கலந்துரையாடி வருகின்றோம். எனவே நாம் அனைவரும் அதற்கு முகம் கொடுத்துள்ளோம். எனினும் நாம் எமது அடிப்படை கொள்கையிலிருந்து விலகக்கூடாது. எனவே அது வெறுப்புக்குறிய சமயம் ஆகாது. அது அன்பு செலுத்த வேண்டிய சமயம் ஆகும்.
சமயத்தின் ஆகக்கூடிய நோக்கம் எங்கே முடிவடையும் என்பதை எவ்வாறு கண்டறிவது? எனவே, இஸ்லாம், பௌத்தம், இந்து மற்றும் கிறிஸ்தவம் ஆகிய சமயங்களைச் சேர்ந்த நம் அனைவரும் எமது சமயத்தின் அடிப்படைகளை தேடும் கொள்கைகளில் குறியாக இருக்க வேண்டும்.
சமயம் வர்த்தகமயப்படுத்தப்பட்டிருப்பதாக நாம் உணருகின்றோம். ஆம்! யுத்தத்தங்கள் உருவாகவும் சமயம் காரணமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டாவதாக சமயம் தனக்குத்தானே ஏற்றுக் கொள்வதுடன் நவீனத்துக்கு வழிகாட்ட வேண்டும். இஸ்லாமானது நபிகள் பிறந்த அரேபியாவுக்கே மீண்டும் செல்ல வேண்டும் என கூறுபவர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்?
இஸ்லாமிய நாகரீகத்தின் பொற்காலம் பக்தாதை தலைநகரமாகக் கொண்டிருந்தது. அது வானியல், மருத்துவம் என எம்மீது ஏற்படுத்தியுள்ள செல்வாக்கைப் பாருங்கள்.
ஸ்பெயினில் உள்ள ஐபீரியன் குடாநாட்டிலுள்ள முஸ்லிம் இராஜ்ஜியங்களைப் பாருங்கள். அவையே இன்று ஐரோப்பாவாக வளர்ச்சியடைந்துள்ளன. நாம் அவற்றைப் பற்றி பேசுகின்றோம். உஸ்மானிய சாம்ராச்சியத்தைச் சேர்ந்த சுலைமான் நபியைப் பாருங்கள்.
இஸ்லாம் அரேபியாவில் ஆரம்பமானாலும் பெரும் எண்ணிக்கையானவர்கள் தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவிலேயே உள்ளனர்.
இந்தோனேசியா, மலேசியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் மட்டுமன்றி சஹாராவின் தெற்குப் பகுதியிலும் பெரும் எண்ணிக்கையானவர்கள் இருக்கின்றனர். அடுத்ததாக கிழக்கே அமெரிக்காவிலும் அதிகமானவர்கள் இருக்கின்றனர்.
இலங்கையில் முஸ்லிங்களுக்கிடையே நவீன சிந்தனையை ஏற்படுத்தும் நிலையங்களை உருவாக்க வேண்டுமென்றே நான் கூறுவேன். அதற்கு மிகச் சிறந்த இடம் தென்கிழக்கே ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்தப் பல்கலைக்கழகம் ஆகும்.
இது நவீன சிந்தனைகளைக் கொண்ட நவீன பல்கலைக்கழகமாக இருக்க வேண்டும். அப்போது அரசாங்கத்தின் ஆதரவும் அதற்கு கிடைக்கும். எனினும் இதனை நீங்கள் முஸ்லிம்களுக்கு மட்டும் மட்டுப்படுத்த நினைத்தால் பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்திற்கூடாகவும் நீங்கள் இதே விளைவை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே நவீனம் எனும் சாரம்சத்தையே நாம் ஏற்றுக் கொண்டு முன்நோக்கிச் செல்ல வேண்டும்.
தற்போது நீங்கள் உங்கள் 100வது ஆண்டை பூர்த்தி செய்துள்ளீர்கள். நாமும் 75வது ஆண்டை பூர்த்திசெய்யவுள்ளோம். எமது அதிகப்படியான நேரம் ஒருவருடன் ஒருவர் சண்டையிடுவதிலேயே கழிந்துள்ளது. எனினும் தற்போது இது நல்லிணக்கத்துக்கான நேரமாகும்.
எனவே தான் நாம் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்துள்ளோம். அதாவது இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எவ்வாறு நல்லிணக்கத்துக்குப் பங்களிக்கப் போகின்றார்கள் என்பது பற்றி நாம் ஆராய்ந்தோம்.
முதற்படி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாம் மீண்டும் கட்சித் தலைவர்களையும் சந்திக்கவுள்ளோம். இந்தக் கலந்துரையாடல் மூலமாக நாம் பல முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்.
மலையகத் தமிழர்களை சமூகத்துடன் ஒன்றிணைப்பது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்துவோம். அவர்கள் தாமதித்து வந்தாலும் அவர்களையும் சமூகத்துடன் நாம் ஒன்றிணைக்க வேண்டும்.
எமது சமூகத்தில் காலம் தாமதித்து பல இனங்களும் சமயங்களும் ஒன்றிணைக்கப்பட்டாலும் அவர்கள் அதற்குரிய பலனை அனுபவிக்கவில்லை. எனவே அவர்களும் முழுமையாக ஒன்றிணைக்கப்பட வேண்டும்.
மூன்றாவதாக முஸ்லிம் இனத்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் எனக்கு கலந்துரையாட வேண்டும். 2018 ஆம் ஆண்டின் திகன கலவரம் , 2019 ஆம் ஆண்டின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பன தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்படுவதுடன் அதற்கு காரணமாக அமைந்த விடயங்கள் தொடர்பிலும் நாம் பேச வேண்டும்.
கொழும்பு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினையிலும் முற்றிலும் வேறுபட்ட பிரச்சினைகளையே இலங்கையின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள முஸ்லிம்களும் மன்னார் முஸ்லிம்களும் எதிர்நோக்குகின்றனர்.
இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் , சிங்களவர்கள் போன்று இவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் எதிர்கொண்டுள்ள துன்பங்கள், சமூக பின்னடைவுகள் உள்ளிட்ட விடயங்களை வெளிக்கொணர வேண்டும். இது நல்லிணக்கம் தொடர்பான மூன்றாம் கட்ட நடவடிக்கையாக அமையும்.
புதிய பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதற்காக அரச மற்றும் பொதுக் கொள்கைகளுக்கான ஏனைய நிறுவனங்களும் உருவாக்கப்படும். ஒரு தேசமாக நாம் உறுதியாக இருப்போம். சமூக நீதி நிலவட்டும் .
இனங்களுக்கிடையேயான ஒற்றுமை நிலவட்டும். எமக்குள் சௌபாக்கியத்தை ஏற்படுத்தும் புதிய பொருளாதாரத்தை நாம் கொண்டிருப்போம். என்னை இந்த நிகழ்விற்கு அழைத்தமைக்கு நன்றி.
இவ்வாறு ரணில் உரையாற்றினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
July 8, 2025, 11:28 am
தென் அமெரிக்காவின் முதல் பெண் அதிபரானார் ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ்
July 7, 2025, 9:51 pm
பஹல்காமுக்கு கண்டனம்- காஸாவுக்கு கவலை: பிரிக்ஸில் இந்தியா
July 7, 2025, 4:46 pm
சிங்கப்பூரின் தமிழ் நாளிதழான தமிழ் முரசு 90ஆம் ஆண்டை நிறைவு செய்தது
July 6, 2025, 7:25 pm
நடைபாதையில் சிறுநீர் கழித்த பயணி: அவசரமாகத் தரையிறங்கியது விமானம்
July 6, 2025, 12:57 pm
வரிக் குறைப்பு மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
July 6, 2025, 11:19 am
12 நாடுகளுக்குப் புதிய வரி விதிக்கப்படும்: டிரம்ப் அறிவிப்பு
July 6, 2025, 11:05 am
உக்ரைன் மீது 550 டிரோன்களை வீசி ரஷியா பயங்கர தாக்குதல்
July 6, 2025, 10:58 am
திடீரென ஒலித்த தீ எச்சரிக்கை ஒலி: பயத்தில் விமானத்தின் இறக்கைகளிலிருந்து குதித்த பயணிகள்
July 5, 2025, 8:01 pm