
செய்திகள் மலேசியா
மலாக்கா சட்ட மன்றம் ஜுலை மாதத்தின் மத்தியில் கூட்டப்படும்: துணை சபாநாயகர் அறிவிப்பு
மலக்கா:
மலக்கா மாநில சட்டமன்றம் ஜூலை இரண்டாவது வாரத்தில் கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிகிறது. தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று சட்டமன்ற அவைத் துணைத் தலைவர் இன்று தெரிவித்தார்.
துணை சபாநாயகர் டத்தோ கசாலே முஹம்மத் கூறுகையில், மலாக்கா கவர்னர் துன் மொஹம்மத் அலி ருஸ்தாமின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் மாநில சட்டமன்றம் கூடும் நாள் அறிவிக்கப்படும். சட்டமன்றம் கூடுவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக சரியான தேதி அறிவிக்கப்படும் என்றார் அவர்.
“மாநில சட்டசபையைக் கூட்டுவதில் நாங்கள் பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லாஹ் ரியாயத்துதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவின் உத்தரவிற்கு முற்றிலும் கட்டுப்படுகிறோம். பேரரசர் கூடிய விரைவில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களை கூட்டுமாறு உத்தரவிட்டுள்ளார்.
"மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோஸ்ரீ அப்துர் ரவூப் யூசுப், மலாக்கா கவர்னருடன் கூட்டத்தை நடத்துவதற்கான ஒப்புதலை விரைவில் பெறுவார்" என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.