
செய்திகள் மலேசியா
ஆகஸ்ட் 24ஆம் தேதி கூடுகிறது பெர்லிஸ் சட்டமன்றம்
கங்கார்:
மாமன்னரின் உத்தரவை அடுத்து பெர்லிஸ் சட்டமன்றம் ஆகஸ்ட் 24ஆம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாமன்னருடன் மலாய் ஆட்சியாளர்களின் கலந்துரையாடலுக்குப் பிறகு இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அண்மையில் நாடாளுமன்ற, மாநில சட்டமன்றங்களின் கூட்டத்துக்கு இயன்ற விரைவில் ஏற்பாடு செய்ய வேண்டும் என மாமன்னர் கருத்து தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.
எனினும், எந்த மாநிலமும் எப்போது சட்டமன்றம் கூடும் என்பது குறித்த திட்டவட்ட அறிவிப்பை வெளியிடவில்லை. இந் நிலையில் பெர்லிஸ் மாநிலம் பிற மாநிலங்களை முந்திக்கொண்டு சட்டமன்ற அமர்வு துவங்கும் தேதியை அறிவித்துள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 24ஆம் தேதி பெர்லிஸ் சட்டமன்றம் 3 நாட்களுக்கு கூட்டப்படும் என அம் மாநில சட்டமன்ற சபாநாயகர் ஹம்தான் பஹாரி தெரிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் மாநில சட்டமன்றம் ஏற்கெனவே கூடியுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள சபாநாயகர், அனைத்து நிர்வாக நடைமுறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்.