
செய்திகள் மலேசியா
வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் நடவடிக்கை: கிளந்தான் அரசு திட்டம்
கோத்தாபாரு:
கிளந்தான் மாநிலத்தில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் நடவடிக்கை உரிய நேரத்தில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தற்காலிக மையங்களில் தடுப்பூசி போடும் நடவடிக்கை முடிவுக்கு வந்த பிறகு வீடு வீடாகச் செல்லும் நடவடிக்கை தொடங்கும் என அம்மாநில சுகாதாரத் துறையின் இயக்குநர் டத்தோ டாக்டர் ஸைனி ஹுசின் Zaini Hussin தெரிவித்தார்.
அநேகமாக தற்போது நடைபெற்று வரும் தடுப்பூசி நடவடிக்கைகள் செப்டம்பர் அல்லது அக்போடரில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், வீடுதோறும் சென்று தடுப்பூசி போடும் நடவடிக்கை மாற்றுத் திறனாளிகளுக்கும் நோய்வாய்பட்டு படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கும் உதவிகரமாக இருக்கும் என்றார்.
"வீடுதோறும் செல்லும் நடவடிக்கையில் ஏராளமானோரின் பங்களிப்பு தேவைப்படும். தாதியர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் இதில் ஓர் அங்கமாக இருப்பர்," என்றார் டத்தோ ஸைனி ஹுசின்.
இதற்கிடையே இம் மாநிலத்தில் உள்ள 40 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் தடுப்பூசி போடவேண்டும் எனும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், போதுமான தடுப்பூசி அடுத்த வாரம் வந்து சேரும் என மந்திரிபெசார் உறுதி அளித்திருப்பதாகவும் தடுப்பூசிகள் வந்த பின்னர் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்," என்றார்.