
செய்திகள் மலேசியா
நாடு பெருந்தொற்றுப் பிடியிலிருந்து விரைவில் விடுபட்டுவிடும் என பிரதமர் நம்பிக்கை
புத்ராஜெயா:
மலேசியாவில் அதிக அளவில் தடுப்பூசி மையங்கள் திறக்கப்படுவதால் தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் நாடு பெருந்தொற்றுப் பிடியிலிருந்து விரைவில் விடுபட்டுவிடும் என பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதீன் யாசின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
"கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகிய இரு கூட்டரசுப் பிரதேசங்களும் எதிர்பார்த்ததை விட வேகமாக மந்தை நோய் எதிர்ப்புச் சக்தியை எட்டிப்பிடித்துவிடும் எனத் தெரிகிறது.
"எதிர்வரும் ஆகஸ்டு மாதத்துக்குள் அவ்விரு பிரதேசங்களும் மந்தை நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட சமூகமாக உருவெடுத்திருக்கும் என எதிர்பார்க்கலாம்," என்றார் பிரதமர் மொஹைதீன் யாசின்.
மக்கள் மத்தியில் தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. ஜூன் 11ஆம் தேதி வரை மலேசிய மக்கள் தொகையில் 13 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந் நிலையில் மக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள பிரதமர் மொஹைதீன் யாசின், மலேசியா பெருந்தொற்று நோய்ப் பிடியிலிருந்து மெல்ல விடுபட்டுவிடும் என்றார்.