
செய்திகள் மலேசியா
தேர்தல் மூலம் சபாவில் பாரிசான் பாடம் கற்றுக்கொண்டது: ஸாஹித் ஹமிதி
கோத்த கினபாலு:
இனி தொகுதிப் பங்கீடு தொடர்பில் தேசிய முன்னணி மிகக் கவனமாக இருக்கும் என்று அம்னோ தலைவர் ஸாஹித் ஹமிதி தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்படுவதை பாரிசான் நேசனல் விரும்பவில்லை என்றார் அவர்.
Gabungan Rakyat Sabah- உடனான தொகுதிப் பங்கீடு தொடர்பாக கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த 2020 செப்டம்பர் மாதம் சபாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் மூலம் தேசிய முன்னணி பாடம் கற்றுக் கொண்டதாக ஸாஹித் ஹமிதி கூறினார்.
சபா சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி மூலையில் முடக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அரசியல் ரீதியில் மூலையில் முடக்கப்பட்டது என்றால் என்னவென்பதை விவரிக்கவில்லை.
எனினும், மீண்டும் அத்தகையதொரு சூழலை எதிர்கொள்ள விரும்பவில்லை என்றும், இனி மிகக் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் ஸாஹித் ஹமிதி தெரிவித்தார்.
மாநில முதல்வரை நியமிக்கும் விஷயத்தில்தான் அம்னோ ஏமாற்றப்பட்டதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தாம் வேறு பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி அவ்வாறு குறிப்பிட்டதாக அவர் விளக்கம் அளித்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்ததும் பெர்சாத்து கட்சியை சேர்ந்த ஒருவர் முதல்வராக நியமிக்கப்பட தேசிய முன்னணி எதிர்ப்பு தெரிவித்தது.
தேர்தலில் பெர்சாத்து கட்சியைவிட தேசிய முன்னணி அதிக இடங்களில் வெற்றிபெற்றதாக சுட்டிக்காட்டப்பட்டது.
"இனிமேலும் அதேபோன்ற மூலையில் முடக்கப்படும் அரசியல் பயணத்தை அனுபவிக்க தேசிய முன்ணி தயாராக இல்லை. எங்களுக்குப் பலன் அளிக்காது எனில், அந்த விஷயத்தில் கவனமாக இருப்போம். மேலும் எங்கள் கை ஓங்கி இருப்பதையும் உறுதி செய்வோம்," என்று நேற்று சபா தேசிய முன்னணி கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் தெரிவித்தார்.