நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மேற்கு ஆசிய மோதல்: எரிசக்தி ஏற்றுமதி கட்டுப்பாடு குறித்து மலேசியாவின் முடிவு எடுக்கப்படும்: துணைப்பிரதமர் ஃபடில்லா யூசுஃப்

கூச்சிங்: 

மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் நீடித்து உலகளாவிய வழங்கலை பாதித்தால், எரிசக்தி ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதிப்பதை அரசு பரிசீலிக்கலாம் என்றாலும், அந்த நடவடிக்கை கடைசி விருப்பமாக மட்டுமே மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசுஃப், மலேசியா இன்னும் பல சர்வதேச எரிசக்தி வழங்கல் ஒப்பந்தங்களுக்கு உட்பட்டுள்ளது. இதில் தேசிய எரிசக்தி நிறுவனம் PETRONAS மேற்கொண்டுள்ள உறுதிப்பாடுகளும் அடங்கும் என்று கூறினார்.

உலகளாவிய நிலவரத்தை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. குறிப்பாக உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணை போன்ற முக்கிய வர்த்தக பாதைகளில் ஏற்படக்கூடிய இடையூறுகள் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது என்றார் அவர்.

“தற்போது PETRONAS பல ஒப்பந்தங்களால் கட்டுப்பட்டுள்ளது. இருப்பினும் அவசியம் ஏற்பட்டால், ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலையையும் உட்பட பல அம்சங்களை அரசு பரிசீலிக்கும்.

“ஆனால் அது கடைசி நடவடிக்கையாக மட்டுமே இருக்கும். ஏனெனில் நாங்கள் இன்னும் பல ஒப்பந்தங்களுடன் இணைந்துள்ளோம்,” என்று அவர் இன்று இங்கு நடைபெற்ற 'Program Sumbangsih Santunan Kasih Seindah Syawal' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், எரிசக்தியைச்  சிக்கனமாக பயன்படுத்துவதற்கு வலியுறுத்துவது, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து மாற்று ஆதாரங்களைக் கண்டறிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்று அவர் கூறினார்.

இந்த நடவடிக்கைகள் மூலம் மலேசியா எரிசக்தி வழங்கலில் நிலைத்து, உலக பொருளாதாரத்தின் அநிச்சயத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்து, பொதுமக்களும் வணிகத் துறையும் போதுமான எரிசக்தியைத் தொடர்ந்து பெறுவதை உறுதி செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset