நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்.ஏ.சி.சி விசாரணைக்கு உதவுபவர்களுக்கு ஆரஞ்சு நிற ஆடை அணிய தேவையில்லை: பிரதமர் அன்வார் விளக்கம் 

கோலாலம்பூர்: 

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு உதவுவதற்காக மட்டுமே அழைப்படும் நபர்களுக்கு ஆரஞ்சு நிற சிறை ஆடையை அணிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

இத்தகைய நடவடிக்கை அவர்கள் மீது தவறான அல்லது எதிர்மறையான பார்வையை சமூகத்தில் உருவாக்கக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் நபர்கள் மீது ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக, அவர்களிடம் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

அம்பாங், புக்கிட் இந்தா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றிய பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர், குற்றம் சாட்டப்படுவதற்கு முன்பாகவே அவர்களுக்கு ஆடை வழங்கி அடையாளப்படுத்துவது நியாயமற்றது என்றார்.

விசாரணையில் ஏதேனும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வேண்டிய சூழல் எழுந்தால், எந்த நிறத்தில் ஆடை வழங்க வேண்டும் என்பதை அமலாக்க அமைப்புகளின் முடிவிற்கே விட்டுவிடுவதாக அன்வார் குறிப்பிட்டார்.

இருப்பினும், ஆரம்பகட்ட விசாரணைகளில் ஒத்துழைப்பு நல்கும் வரை அவர்களுக்கு ஆரஞ்சு நிற சீருடை அணிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

முன்னதாக, ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்காக தடுப்புக் காவலில்  வைக்கப்படும் நபர்கள் நீதிமன்றத்திற்கு ஆரஞ்சு ஆடையுடன் அழைத்து வரப்படும் நடைமுறை குறித்துப் பொதுமக்களிடையே காரசாரமான விவாதங்கள் எழுந்தது குறிப்பிடத்தகுந்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset