நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காலத்தை வென்றவர் கவியரசு கண்ணதாசன்; கண்ணதாசனின் படைப்புகள் தலைமுறைகளைத் தாண்டி வாழ்கின்றன: டத்தோஸ்ரீ சரவணன்

ஈப்போ:

தமிழ் இலக்கியம், கவிதை, திரையிசைப் பாடல், எழுத்துலகில் தனக்கென அழியாத தடத்தைப் பதித்த கவியரசு கண்ணதாசன் உண்மையிலேயே “காலத்தை வென்றவர்” என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் புகழாரம் சூட்டினார்.

கண்ணதாசன் மறைந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும், அவரது கவிதைகளும், பாடல்களும், எழுத்துகளும் இன்றளவும் மக்களின் மனதில் உயிரோட்டத்துடன் இருப்பது அவரது ஆளுமைக்கும், படைப்பாற்றலுக்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என அவர் குறிப்பிட்டார்.

கவியரசு கண்ணதாசனை நினைவுகூரும் வகையில் “காலத்தை வென்றவர் கவியரசு கண்ணதாசன்” என்ற சிறப்பு நிகழ்வு இன்று ஈப்போவில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தலைமை தாங்கினார். மாநில ஏற்பாட்டுக் குழுத் தலைவராக டத்தோ வி.இளங்கோ செயல்பட்டார்.

எளிய மொழியில் ஆழமான சிந்தனைகள்

கண்ணதாசனின் மிகப்பெரிய சிறப்பு, கடினமான வாழ்க்கைத் தத்துவங்களையும் ஆழமான சிந்தனைகளையும் சாதாரண மக்களும் புரிந்துகொள்ளக் கூடிய எளிய தமிழில் எடுத்துச் சென்றதுதான் என டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

மனிதனின் ஆசை, ஏமாற்றம், காதல், பிரிவு, துயரம், மகிழ்ச்சி, நம்பிக்கை, வாழ்க்கைப் போராட்டம் என மனித வாழ்வின் ஒவ்வொரு உணர்வையும் கண்ணதாசன் தனது எழுத்துகளில் பதிவு செய்துள்ளார்.

அதனால்தான் அவரது பாடல்களும் கவிதைகளும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் முடங்கிவிடாமல், ஒவ்வொரு தலைமுறையினரிடமும் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இளைஞர்களும் கண்ணதாசனை அறிய வேண்டும்.

இன்றைய இளம் தலைமுறையினர் கண்ணதாசனின் படைப்புகளைப் படித்து அவரது சிந்தனைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் டத்தோஸ்ரீ சரவணன் வலியுறுத்தினார்.

கண்ணதாசனின் படைப்புகள் வெறும் பொழுதுபோக்குக்கானவை அல்ல. அவற்றில் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் அனுபவமும், மனிதர்களை அணுகும் பக்குவமும், சமூகத்தைப் பார்ப்பதற்கான பார்வையும் நிறைந்துள்ளன என்றார்.

தமிழ் மொழியின் செழுமையையும் இனிமையையும் தனது எழுத்துகளின் மூலம் மக்களிடம் கொண்டு சென்ற கண்ணதாசனின் பங்களிப்பு என்றும் மறக்க முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset