நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்களுக்கான சேவையைத் தொடர புதிய அரசியல் பாதை: வவாசான் நெகாரா கட்சியில் இணைந்தார் டத்தோ சைமன் சுரேஷ்

கோலாலம்பூர்:

நீண்டகால அரசியல் பயணத்தில் பெற்ற அனுபவங்கள், நட்புகள் மற்றும் மக்கள் சேவையை அடிப்படையாகக் கொண்டு, நாட்டின் எதிர்காலத்திற்காகத் தமது அரசியல் பயணத்தை வாவாசான் நெகாரா கட்சியில் தொடரவுள்ளதாக அதன் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ சைமன் சுரேஷ் வருணமேகம் தெரிவித்துள்ளார்.

டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் தலைமையிலான வாவாசான் நெகாரா கட்சியில் இணைந்திருப்பதை உறுதிசெய்த அவர், அரசியல் தளங்கள் மாறினாலும் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் கடமை உணர்வும் ஒருபோதும் முடிவுக்கு வந்துவிடக் கூடாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

அரசியல் பயணத்தில் பாதைகளும் திசைகளும் மாறுவது இயல்பான ஒன்று எனக் குறிப்பிட்ட அவர், 

கடந்த காலங்களில் தம்முடன் இணைந்து மக்கள் பணியாற்றிய நண்பர்கள், முன்னாள் சக அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் உணர்ச்சிப்பூர்வமான அழைப்பு விடுத்துள்ளார்.

திறமையும், அனுபவமும், சமூகத்திற்குப் பங்காற்றும் பேரார்வமும் கொண்ட அனைவரும் "அடுத்து என்ன?" என்ற கேள்வியோடு தயங்கி நிற்காமல், புதிய சிந்தனைகளுடனும் வலிமையுடனும் முன்னோக்கி நகர வேண்டிய தருணம் இதுவென அவர் சுட்டிக்காட்டினார்.

மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகள், வாழ்க்கைச் செலவின உயர்வு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் குடும்பங்களின் எதிர்காலம் ஆகியவையே இன்றைய சூழலில் நாம் முதன்மையாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய உண்மையான சவால்கள் என்று வலியுறுத்திய டத்தோ சைமன் சுரேஷ், பழைய கசப்புகளை மறந்து, முதிர்ச்சியான மற்றும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க ஒன்றிணைய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

மலேசிய நாட்டின் பிரகாசமான எதிர்காலத்தையும், மக்களின் நலனையும் மட்டுமே ஒரே இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய அத்தியாயத்தில், தங்களின் திறமைகளையும் புதிய யோசனைகளையும் கொண்டு பங்களிக்க முன்வருமாறு தமது பழைய சகாக்களுக்கும் நண்பர்களுக்கும் அவர் நெகிழ்ச்சியுடன் அழைப்பு விடுத்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset