செய்திகள் மலேசியா
இணையப் பகடிவதையை இன்னும் எத்தனை காலம் தான் சகித்துக் கொள்ள வேண்டும்?: பல வருடமாக துன்பத்தை அனுபவிக்கும் இன்ஃப்ளூயன்சர்கள் குமுறல்
கோலாலம்பூர்:
இணையப் பகடிவதையை இன்னும் எத்தனை காலம் தான் சகித்துக் கொள்ள வேண்டும் என பல வருடமாக துன்பத்தை அனுபவிக்கும் 3 இன்ஃப்ளூன்சர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பத்துக்கும் மேற்பட்ட போலிஸ் புகார்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் தொழில்முனைவோராக இருக்கும் அந்த மூன்று இன்ஃப்ளூயன்சர்களும் இன்னும் அதே நபர்களையும், அதே தாக்குதல்களையும், அதே கேள்விகளையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
ஒலிவியா லோபஸ், சைலஜா செல்வீகம், அனிதா லோபஸ் ஆகியோருக்கு, சமூக ஊடகங்களில் வரும் விமர்சனங்கள், வியாபாரத்தில் இடையூறுகள் ஏற்படுகிறது.
மேலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நுழைந்து, துணைவர்கள், பெற்றோர்கள், குழந்தைகளும் குறிவைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இணைய பகடிவதை, அச்சுறுத்தல்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் செயல்திறனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
குறிப்பாக முந்தைய கணக்குகள் முடக்கப்பட்ட பிறகும் புதிய கணக்குகளுடன் மீண்டும் மீண்டும் குற்றம் செய்பவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இதற்கு தகவல் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் நேரடியாக இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாங்கள் பலமுறை போலிஸ், எம்சிஎம்சியிடமும் புகார்களை அளித்துள்ளோம்.
இருந்தாலும் இன்னும் எவ்வளவு காலத்திற்கு நாங்கள் இதைச் சகித்துக் கொள்ள வேண்டும்? என்று எங்களுக்கு தெரியவில்லை.
குற்றவாளிகள் வணிக நிறுவனங்களைக் குறிவைத்து, எங்கள் தயாரிப்புகள் மோசடி என்று பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி, எங்களை அவதூறு செய்வதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
இது உண்மையிலேயே நிற்பதற்கு இன்னும் எத்தனை புகார்கள் அளிக்கப்பட வேண்டும்? என்று அவர்கள் இன்று ஊடகங்களிடம் கூறினார்.
பகடிவதை, துன்புறுத்தல், பயம் அல்லது பதற்றத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தல், அவமதிப்பு அல்லது அவதூறான தகவல்தொடர்புகள் உள்ளிட்ட செயல்களைக் கையாள்வதற்கு, மலேசியாவில் தண்டனைச் சட்டத்தின் 507பி முதல் 507ஜி வரையிலான பிரிவுகள் மூலம் ஏற்கனவே குறிப்பிட்ட விதிகள் இருக்கும்போது இந்தக் கேள்வி எழுகிறது.
பெரிய பின்தொடர்பாளர்களைக் கொண்ட தனிநபர்களுக்கே பகடிவதையை நிறுத்துவதில் சிரமம் இருக்கும்போது,
தங்கள் குரல்களை ஒலிக்கச் செய்ய ஒரு தளம் இல்லாத சாதாரண பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலைமை இன்னும் மிகவும் சவாலாக இருக்கலாம் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
ஆக இணைய பகடிவதை விவகாரங்களுக்கு அரசு விரைந்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
