செய்திகள் மலேசியா
மலாக்கா மாநிலத் தேர்தல்; பேச்சுவார்த்தைக்கும், தொகுதிப் பரிமாற்றத்திற்கும் தேசிய முன்னணி தயாராக உள்ளது: ஜாஹித்
கோலாலம்பூர்:
மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான தொகுதிப் பரிமாற்றம் உட்பட, தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நேர்மையாகவும் உண்மையாகவும் செய்யப்படும் வரை, தேசிய முன்னணி அதற்குத் தயாராக உள்ளது.
தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.
மலாக்கா தேசிய முன்னணி தலைவர் அப் ரவுப் யூசோ வலியுறுத்தியது போல, எந்தவொரு கட்சியும் வென்ற தொகுதிகள் மதிக்கப்பட வேண்டும்.
அரசியல் கூட்டாளிகளிடம் வெறுமனே ஒப்படைக்கப்படக்கூடாது என்பதே பேச்சுவார்த்தைகளின் அடிப்படைக் கொள்கையாகும்.
ஆனால், தொகுதிகளின் எண்ணிக்கை சமமாக இருக்கும் பட்சத்தில், இருக்கைகளை மாற்றிக்கொள்வது அல்லது பரிமாற்றம் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று அவர் கூறினார்.
2021 பொதுத் தேர்தலில் வென்ற மலாக்கா மாநிலத்தின் 21 இடங்களையும் தேசிய முன்னணி தக்கவைத்துக் கொள்ளும் என்று ஜாஹித் முன்னதாகக் கூறியிருந்தார்.
அந்தந்தக் கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற மாநிலங்களை உள்ளடக்கிய தொகுதிப் பரிமாற்றங்கள் சமச்சீரான முறையில் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், அது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
