செய்திகள் மலேசியா
மலேசியா அன்வாருக்குச் சொந்தமானது அல்ல: நிதி ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு ஐந்து கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம்
கோலாலம்பூர்:
ஐந்து கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைக் கடுமையாகச் சாடியதுடன், இந்த நாடும் மக்களின் பணமும் அவருக்கு சொந்தமானவை அல்ல என்பதை நினைவூட்டினர்.
பல கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தத்தமது தொகுதிகளுக்கான நிதி ஒதுக்கீடுகளைப் பெறுவதற்காக MyKhas இணையதளத்தை அணுகும் வசதியை இழந்ததால் ஏற்பட்ட சமீபத்திய சர்ச்சையைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு ஒரு மிக அடிப்படையான விஷயத்தை நாங்கள் நினைவூட்ட விரும்புகிறோம்.
மலேசியா அன்வர் இப்ராஹிமுக்கு மட்டும் சொந்தமானதல்ல. அரசாங்கம் அவருடைய வீடு அல்ல.
பொது நிதி ஒதுக்கீடுகள் கட்சியின் அல்லது பிரதமரின் கைக்காசு அல்ல என்று அவர்கள் இன்று ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.
இந்த அறிக்கையை அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில், சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென், பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சீன் சுங், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் சுப்ரமணியம், வாங்சா மாஜு நாடாளுமன்ற உறுப்பினர் ஜாஹிர் ஹசான் ஆகியோர் வெளியிட்டனர்.
வோங், லீக்குப் பிறகு, MyKhas-ஐ அணுகும் உரிமையை இழந்த மூன்றாவது ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோட்சியா ஆவார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் MyKkhas அணுகல் தடுக்கப்பட்டு, தொகுதி ஒதுக்கீடுகளின் நிர்வாகம் அன்வர் இப்ராஹிமுக்கு ஆதரவான தனிநபர்கள் அல்லது பினாமிகளிடம் ஒப்படைக்கப்படும் போது, அது மிகவும் தீவிரமான விஷயமாகும் என்று அவர்கள் கூறினர்.
- பார்த்திபன் நாகராஜன்
