நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லாரி ஓட்டுநர் மீது 21 பாலியல் குற்றச்சாட்டுகள்: நீதிமன்றத்தில் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

ஈப்போ: 

கடந்த ஏப்ரல் மாதம் முதல் தனது இரு சொந்த மகள்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் சுமத்தப்பட்ட 21 குற்றச்சாட்டுகளையும் 41 வயதான லாரி ஓட்டுநர் ஒருவர் மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

ஈப்போ செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஜீன் ஷர்மிளா ஜேசுதாசன் முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் இந்த வாக்குமூலத்தை அளித்தார்.

கடந்த ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து ஜூலை 26-ஆம் தேதி வரை, பேராக்கின் செரி இஸ்கந்தரில் உள்ள ஒரு வீட்டில், 13 மற்றும் 16 வயதுடைய தனது இரு மகள்களுக்கு எதிராக அவர் உடலியல் ரீதியிலான பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் மீது 2017-ஆம் ஆண்டின் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 14(a), 14(b) மற்றும் 14(d)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே நம்பிக்கையான உறவுமுறை இருப்பதால், இந்த குற்றச்சாட்டுகள் அதே சட்டத்தின் பிரிவு 16(1)-உடன் சேர்த்து வாசிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்படக் கூடியவை ஆகும்.

இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.

அதே சட்டத்தின் பிரிவு 16(1)-ன் கீழ், குற்றம் சாட்டப்பட்டவருக்குக் கூடுதல் தண்டனையாக மேலும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் குறைந்தபட்சம் இரண்டு பிரம்படிகளும் வழங்கப்பட வாய்ப்புள்ளது.

துணை அரசு வழக்கறிஞர் மொனிஷா பாண்டே குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பிணை வழங்க எதிர்ப்புத் தெரிவித்தார். மேலும், அவர் சாட்சிகளையோ பாதிக்கப்பட்டவர்களையோ தொடர்பு கொள்ளக் கூடாது என்றும், மாதந்தோறும் அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் கூடுதல் நிபந்தனைகளைக் கோரினார்.

இருப்பினும், நீதிபதி அவருக்கு RM15,750 பிணைத் தொகையை நிர்ணயித்து, அரசு வழக்கறிஞர் கோரிய கூடுதல் நிபந்தனைகளுடன் பிணை வழங்கினார்.

மேலும், வழக்கறிஞரை நியமிப்பதற்கும் வழக்கின் மறு விசாரணைக்கும் செப்டம்பர் 14-ஆம் தேதியை ஒத்திவைத்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset